Sunday, November 25, 2007

விவாகரத்து!!

மலை போல்
உயர்ந்து விட்டது
விலைவாசி!
மலிவாகிக் கொண்டிருக்கின்றன
விவாகரத்துக்கள்!

இல்லாமை
இயலாமையால்
கன்னியாராகவே
காலத்தைக் கழித்திடும்
கணக்கில்லா
எண்ணிக்கையில்
எத்தனையோப் பெண்கள்
இப்படி இருக்க....

மனப் பொருத்தம்
பார்த்து
மணம் புரிந்தோர்
மத்தியிலும்
மிகைந்து வருகின்றன
மணமுறிவும்
மனமுறிவும்...

பணப் பொருத்தம்
பார்த்து
வரதட்சணைக்கு
விலைபோனோர்
மத்தியிலும்
மலிவாகிவிட்டன
விவாகரத்துக்கள்!

பெயர் பொருத்தம்
ஜாதகப் பொருத்தம்
பார்த்து
நிச்சயிக்கப் பட்ட
திருமணங்களும்
மணமுறிவில்
மனமுறிவில்...

ஒத்துப் போகாமல்
ஒதுங்கிக் கொள்பவர்கள்
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
நாள்தோறும்
அநாதைக் குழந்தைகள்!

அறியாமையில்
உழல்பவர்கள்
அமைதியாய்
இல்லறத்தில்!
அதிகம் படித்தவரே
விவாகரத்து
வழக்கு மன்றங்களில்!

பொறுமை
புரிந்து கொள்ளல்
விட்டுக் கொடுத்தல்
எல்லாமே
தேய்பிறையாய்.....
குழந்தைகள் ஆடும்
பொம்மைக் கல்யாணம் போல்
கேலிக்குறியதாகி விட்டிருக்கிறது
திருமணப் பந்தம்!

பண்பாடு
பாரம்பரியம்
கலாச்சாரப்
பெருமை யெல்லாம்
என்று உணரும்?
நம் சமுதாயம்!

மலை போல்
உயர்ந்து விட்டது
விலைவாசி!
மலிவாகிக் கொண்டிருக்கின்றன
விவாகரத்துக்கள்!!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஏப்ரல் 12 2007

No comments: