Saturday, February 9, 2008

எதில் திருப்தி ?

திருப்தி எதிலே

மனிதா உனக்கு?

எதிலுமே இல்லை

திருப்தி உனக்கு!


மண்வீட்டில் இருக்கையிலே

கல்வீடு ஆசை!

கல்வீடு கிடைத்ததுமே

மாடமாளிகைக்கு ஆசை!


நூறுகள் சம்பாதிக்கையில்

ஆயிரம் உன்னாசை!

ஆயிரங்கள் கண்டதுமே

இலட்சம் கோடிகள் மேலாசை!


கால்கொண்டு நடக்கையிலே

இருசக்கரம் உன்னாசை!

இருசக்கரம் கிடைத்ததுமே

நாற்சக்கரத்தின் மேலாசை!


மணவாழ்வு காணாதபோது

ஒருமனைவி ஆசை!

மனைவியொருத்தி வந்தபின்னர்

மற்றபெண்களின் மேலாசை!


கூட்டத்தில் ஒருவனாயிருந்தபோது

மேடை ஏற ஆசை!

ஏறமேடை கிடைத்ததுமே

பதவியின் மேலாசை!


குழந்தையேதும் இல்லாதபோது

ஒரு குழந்தை ஆசை!

பெண்ணாக அது பிறந்துவிட்டால்

ஆண் குழந்தை ஆசை!


திருப்திஇல்லா வாழ்க்கையினாலே

மனநிம்மதி அழியும்!

மனநிம்மதி இழந்தவாழ்வில்

மரணம் ஒன்றே மிஞ்சும்!


- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

24-1-2008.

அகவிழியால் நோக்குங்கள்!!

நேர்மையான சம்பாதனை

எங்கே நிற்கிறது?

அநியாயமாய்

சம்பாதிப்பவனிடமே

செல்வம் குவிகிறது!

வளமும் வசதிகளும்

கூடுகின்றன

எனச் சொல்வோரே!


கோளாறு

உங்கள் பார்வையில்!

புறவிழிகளை விடுத்து

அகவிழியால் நோக்குங்கள்!

சொத்துக்கள் மட்டுமே தெரியும்

உங்கள் சொத்தைப் பார்வையில்

சாபங்களும் பாவங்களும் ஏனோ?

விடுபட்டு விடுகின்றன!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-2-2008.