Saturday, December 29, 2007

அழிவில்லாதது!!

'நீ எனக்குத் தாயுமில்லை

நான் உனக்கு மகனுமில்லை'!


'நீ எனக்கு மகனுமில்லை

நான் உனக்கு அப்பனுமில்லை'!


'நீ என் உடன் பிறப்புமில்லை

நான் உன் கூடப் பிறக்கவுமில்லை'!


'நீ யாரோ

நான் யாரோ'!


இப்படியாக

கோபத்தின் வேகத்தில்

வெறுப்பின் விளிம்பில்

விரக்தியின் உச்சத்தில்

எத்தனையெத்தனையோ

வார்த்தைகளின் வெளிப்பாடு

அறியாமை இருளில்

உணர்ச்சிகளின் தாக்கத்தில்

நம் அன்றாட வாழ்வில்!


வாயின் வார்த்தைகள்

நிஜமாகுமா?

வாளால் வெட்டுவதால்

நீர் துண்டாகி விடுமா?

ஒட்டும் உறவுகளும்

நட்பும் வேண்டுமானால்

கூடலாம் பிரியலாம்!

அழியலாம்!


இறைவனால் உருவாக்கப்பட்ட

இரத்த உறவுகளுக்குள்

உயிர்ப் பிரிவுகள்

உடலழிவுகள் உண்டு!

ஆனால்

உறவுப் பிரிவுகளோ

அழிவுகளோ

என்றென்றும் இல்லை!

இறப்பே இல்லா

உறவுகள் இவை!!


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

டிசம்பர் 27 2007.

Friday, December 21, 2007

தியாகத் திருநாள்!!

எண்ணற்ற

தியாகங்கள்

இவ்வையத்தில்

வரலாற்றிலும்

வாழ்விலும்!


நாட்டுக்காக

மொழிக்காக

உறவுக்காக

நட்புக்காக

காதலுக்காகவென!


உயிர்

உறவுகள்

உடமைகள்

சொத்துக்கள்

சுகங்களெனப்

பலவற்றின் தியாகம்!


ஆயினும்

ஆயிரமாயிரம்

ஆண்டுகளாய்ப்

போற்றப்பட்டு வரும்

ஒரே தியாகம்

இப்ராஹீம்(அலை)நபி

அவர்களுடையது தான்!


தள்ளாத முதுமையில்

தனக்குப் பிறந்த

ஒரே மகனை

இறைவனின் ஆணையேற்றுப்

பலிப்பீடம் ஏற்றியது!


சுய நலமே சூழ்ந்திருக்கும்

இவ்வுலகில் நாம்

தியாக உணர்வு

பெற்றிட

உணர்த்தும் நாளே

தியாகத் திருநாள்

பக்ரீத்!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

15-12-2007.

Thursday, December 20, 2007

நா காக்க! !

'அளவுக்கு மீறினால்

அமிழ்தமும் நஞ்சு'

'அளவோடு இருந்தால்

வளமோடு வாழலாம்'

நோயற்ற வாழ்வே

குறையற்ற செல்வம்'

போன்ற பொன்மொழிகளை

நினைவு கொள்ளாததால்

இன்று

முப்பது நாற்பதுகளில்

இருப்போரெல்லாம்

மருத்துவமனைகளின்

தொடர் வாசத்தில்!


சர்க்கரை

இரத்த அழுத்தம்

உடற் பருமன்

நெஞ்சு வலி

கழுத்து வலி

முதுகு வலி

மூட்டு வலி

உடற் சோர்வு

நரம்புத் தளர்ச்சியென

நீண்டு கொண்டே போகும்

உடலியல் பிரச்சினைகள்!


காரணம் யாதென

ஆராய்ந்து பார்ப்பின்

உணவுக் கட்டுப்பாடும்

உடற் பயிற்சியின்மையுமே!

'யாகாவாராயினும்

நாகாக்க' என

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே

சொல்லி வைத்தார்

பொய்யா மொழிப் புலவர்!

நாமும் நினைவில் கொள்வோம்

அவர் 'நாகாக்க' சொன்னது

சொல்லில் மட்டுமல்ல

சுவையிலும் தான் !!



oooOooo


கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

டிசம்பர் 20 2007

ஈழம் உனக்கேயடா!!

எப்படி மாறிவிட்டது உலகம்- மனிதா

எப்படி மாறிவிட்டது.

உரிமை கேட்பவன்

ஒடுக்கப் படுகிறான்

உரிமை மறுப்பவன்

மதிக்கப் படுகிறான்.


தன் இனத்துக்காக

மொழிக்காக

நாட்டுக்காகப்

போராடுபவன் - தெரு

நாயைப் போல் அடிக்கப்படுகிறான்!

தீவிரவாதி

சமூக விரோதி

அழிவுச் சக்தியென

நிந்திக்கப் படுகிறான்!


நிராயுதப் பாணியாய்

இருப்பவன் பக்கம்

நியாயமும் நிற்பதில்லை!

நீதிகேட்கும் போராளிப்பக்கம்

நித்தம் நித்தம் தொல்லை!

ஆயுதம் தாங்கி

அக்கிரமம் செய்பவரை

எவரும் கேட்பதில்லை!

அவன் ஊரையழித்தாலும்

உயிர்களழித்தாலும் - உலகம்

கண்டு கொள்வதில்லை.


ஈழம் ஆனாலும்

ஈராக் ஆனாலும்

குற்றவாளியாய்க்

கருதப்படுபவன்

மண்ணின் மைந்தனே!

கல்லை எறிந்து

எதிர்ப்பைக் காட்டுபவன்

தீவிர வாதியாம்!

ஆயுதம் ஏந்தி

உயிரை அழிப்பவன்

பாதுகாவலனாம்!


இருளில் மூழ்கி

உறங்கிக் கிடக்குது

உலகம் இப்போதடா!

விழித்துக் கிடந்து

போர் செய்துக் கிடப்பது

வீரர் நீங்களடா!

விடியும் நிச்சயம்

மடியும் பகைமை

வெற்றி உன்னதடா!

விடுதலை கிடைக்கும்

உலகே போற்றும்

தமிழீழம் உனக்கேயடா!!



எழுதியவர்: இமாம்.கவுஸ் மொய்தீன்
தமிழமுதம்.
திங்கட்கிழமை, 17 டிசம்பர். 2007.

Tuesday, December 11, 2007

வீழ்ந்தபின் ஞானம்!!

மரங்கள் நிறைந்த

பரந்த தோட்டம்!

குயில் மைனா

புறா சிட்டு கிளி

காக்கை கௌதாரி

அணில் பட்டாம்பூச்சிகளின்

கானங்கள் கொஞ்சல்கள்

ஆட்டம் பாட்டங்களின்

நிகழ்விடமாய்

எப்போதும் கலகலப்பாய்!


தென்னை பனை

மா பலா முந்திரி

சீதா பப்பாளி யென

இருக்கும் பல்வகை மரங்களுடன்

இல்லாத பேய்களையும்

பாம்புகளையும் சேர்த்து

வளர்ப்பதால்

வளம் கொழிக்கிறது

தோட்டமும்

முதலாளிப் பையும்!


தன்னால் தான்

தோட்டம்

வளம் கொழிக்கிறது

என்றெ ஒவ்வொரு மரமும்

நினைக்கத் துவங்கியதால்

மரங்களுக்கிடையே

விளைச்சலுக்குச் சமமாய்

அகந்தை ஆணவம்

பொறாமை பூசல்களும்

வளமாய் செழிப்பாய்...!


தம்மோடு வாழும்

புற்பூண்டுகளை

அற்பமாய் நினைப்பதிலும்

ஏளனம் செய்வதிலும்

இளக்காரம் பேசுவதிலும்

மட்டும்

தழைத்தோங்கி இருந்தது

மரங்களுக்கிடையேயான

ஒற்றுமையும்

ஒருமைப்பாடும்!


இயற்கைக் கென்ன

சீற்றமோ?

திடீரெனப் பேய்மழையும்

புயலும் வீச

வெள்ளம் சூழ்ந்ததெங்கும்!

வெள்ளம் வடிந்தபின்

வந்து பார்த்தார்

உரிமையாளர்!

நொடிந்து போனார்

வயிற்றிலும் வாயிலும்

அடித்துக் கொண்டார்!


வேரோடு வீழ்ந்துகிடந்தன

மரங்களனைத்தும்!

உடன் அவற்றின்

அகந்தையும் ஆணவமும்

பொறாமையும் பூசல்களும்!

புற்பூண்டுகள் மட்டும்

எப்போதும் போல்

பாதிப்பு மிகையின்றி!

வீழ்ந்தபின் ஞானம் வந்து

என்ன பயன்?


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-12-09

Thursday, November 29, 2007

ஹை கூ.....!!

ஒருமாத உழைப்பு
குடிக்கவா?சூதாடவா?
சம்பள நாள் சங்கடம்!

வானத்திலும் தகறாறு
நேரில் சந்திப்பதில்லை
சூரியன் சந்திரன்!

ஆட்சி மாற்றம்
கட்சி மாறும்
காவல்துறை!

இவர்போல் உழைப்பவர் யார்?
இந்தியருக்குப் புகழ்மாலை!
வெளிநாட்டில்!

சாமிவந்து ஆடுகின்றனர்
திரையரங்குகளில்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு!

படித்த மேதைதான்
கைநாட்டு அவசியம்
பத்திரப் பதிவகம்!

கடலைத் திருத்தும் முயற்சி
ஆறுகளை விழுங்கியது
முகத்துவாரம்!

புத்தர் பிறந்த நாடு
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
போதிமரம்!

பெண் சிசுவதை
ஆண்களின் பெருக்கம்
எய்ட்ஸ் எச்சரிக்கை!

மனிதரின் புறக்கணிப்பு
அநாதைப் பிணம்
சுற்றமாய் எறும்புகள்!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

நவம்பர் 29 2007.

Wednesday, November 28, 2007

முடியவில்லை...!!

ஆறு ஏரி

கிணறு குள

கடின நீரை

மென்னீராக்கலாம்

குடிக்கலாம்

பயன்படுத்தலாம்!


உப்பு கரிக்கும்

கடல் நீரை

குடி நீராக

மாற்றிடலாம்

குடிக்கலாம்

பயன்படுத்தலாம்!


சாக்கடையில்

ஓடும்

கழிவு நீரை

சுத்திகரிக்கலாம்

நாற்றம் நீக்கலாம்

பயன்படுத்தலாம்!


அரசியல் சாக்கடையில்

மூழ்கியோரை ஏனோ?

சுத்திகரிக்கவும்

முடியவில்லை!

நல்வழி படுத்தவும்

இயலவில்லை!!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

செப்டெம்பர் 06 2007.

Tuesday, November 27, 2007

பூமித் தாய்!!

சூரியனின் சுடுநெருப்பில்

எத்தனை முறை

வதங்கியிருப்பாள்!


இடி மின்னல் கொட்டும் மழையில்

எத்தனை முறை

நனைந்திருப்பாள்!


பெருக்கெடுத்தோடும் வெள்ளங்களில்

எத்தனை முறை

வாடியிருப்பாள்!


புயல்கள் சூறாவளிகள் சுழற்காற்றுகள்

எத்தனை முறை

சந்தித்திருப்பாள்!


பூகம்பங்கள் சுனாமிகள் பிரளயங்கள்

எத்தனை முறை

தாங்கியிருப்பாள்!


பீரிட்டுவரும் எரிமலைகளின்

எத்தனை வடுக்களை

சுமந்திருப்பாள்!


வறட்சிகள் பஞ்சங்கள் இயற்கை சீற்றங்கள்

எத்தனை கண்டு

கண்ணீர் வடித்திருப்பாள்!


சோதனைகளைத் தாங்கிப் பழகிவிட்ட

நம் அன்னையரைப் போல்

பூமித் தாய்!!


- இமாம்.கவுஸ் மொய்தீன் (drimamgm2001@yahoo.co.in)

கீற்று.

29-6-2007.

தீபாவளி!

எப்போதோ

அழிந்து விட்ட

அரக்கனுக்காக

வெடி வெடித்து

உற்சாகம்

உவகையுடன்

இன்னும்

எத்தனை ஆண்டுகள் தான்

விழா எடுப்பது?


இன்றும்

நம்மோடு

வாழ்ந்து

கொண்டிருக்கும்

அரக்கர்களை

எப்போது தான்

அடையாளம்

காண்பது?


வறுமை

இலஞ்சம் ஊழல்

அராஜகம்

மோசடி

மதவெறி

தீவிர வாதம்

அணுவாயுதம் என

எத்தனை யெத்தனை

அரக்கர்கள்

இன்றைக்கும்

நம் சமுதாயத்தில்...


இவர்களை

அழித்து விட்டுக்

கொண்டாடப் போகும்

தீபாவளித் திருநாள் தான்

என்னாளோ..?

அவ்வினிய நாளைச்

சந்திப்போமா?

இவ் வினிய

திருநாளில்

சிந்திப்போமா?


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

பதிவுகள்.

நவம்பர் 2007

வெள்ளை !!

வெள்ளை நிறம்

தூய்மையைக் குறிக்கும்!

வெள்ளை ஆடைகள்

கௌரவம் அளிக்கும்!

வெள்ளைச் சந்தை

மதிப்பைக் கூட்டும்!

வெள்ளைப் பணம்

மரியாதை கொடுக்கும்!

வெள்ளை மனம்

பார்ப்பவரை ஈர்க்கும்!

வெள்ளைக் கொடி

சமாதானத்தைக் குறிக்கும்!

ஆம்! ஏற்புடையது தான்!


கருப்பு தாழ்ந்தது!

கருப்பர் அடிமைகள்!

கருப்புப் பணம்

கேவலமானது!

கருப்புச் சந்தை

கண்டனத்துக் குறியதென

கருப்பைக் கீழ்த்தரமாகவும்

வெள்ளையை உயர்ந்ததாகவும்

உலகெங்கும் விதைத்து

விட்டுச் சென்றிருக்கிறது

வெள்ளை ஏகாதிபத்தியம்!


உண்மையில்

போரில் சரணடைவோர்

ஏந்துகின்ற கொடி வெள்ளை!

இன்றைக்கும் பல இடங்களில்

கைம் பெண்கள்

அணியும் ஆடை வெள்ளை!

இலஞ்சம் வாங்கி

ஊழல் செய்து

சமுதாயத்தின்

இரத்தத்தை உறிஞ்சும்

அரசியல்வாதிகளும்

அதிகாரவர்க்கமும்

தம்மை மறைக்க

உடுத்தும் உடை வெள்ளை!


வெள்ளை!

தூய்மையானது தான்!

வெள்ளைக்குப் பின்

தம்மை

மறைத்துக் கொண்டிருப்போர்

தூய்மையானவர் தானா?


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஜூன் 14 2007

மாக்களாய் இருக்கும் வரை...!!

முகமன்

கூறுகிறார்கள்!

கை

குலுக்கிக் கொள்கிறார்கள்!

எப்போது?

காலை வாரலாம்!

என்கிற சிந்தனையோடு.


ஒருவரை

வானளாவப்

புகழ்கிறார்கள்!

இன்னொருவரை

சாக்கடைப் புழுவாய்த்

தூற்றுகிறார்கள்!


காட்சி மாறுகிறது!

கட்சி மாறுகிறது!

புகழ்ந்தவரை

இகழ்கிறார்கள்!

வசைபாடியவரை

வாழ்த்துகிறார்கள்!


அரசியலில்

நிலையான

நண்பருமில்லை!

பகைவருமில்லை யென

தம் நிலையற்ற

தன்மைக்குச் சமாதானமும்

கூறுகின்றனர்....

மாக்களாய் இருக்கும்

மக்களிடம்!


நாவும் நிலையும்

தடம் புரள்கின்றன!

பச்சோந்தியைக்

காட்டிலும்

வேகமாய்

நிறம் மாறும்

அரசியல் வாதிகள்!!

சரி!

எப்போது நாம்

திருந்தப் போகிறோம்?

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

JUL 12, 2007

ஹைக்கூ.......!!

விளை நிலங்கள்
விலை நிலங்கள்
புதுமனை புகுவிழா!

அமைதி தேடலில்
மதம் பிடித்தது
தீவிரவாதி!

வாழை மாவிலை தோரணம்
காத்திருக்கிறது
குப்பைத் தொட்டி!

மது,மாது,பெட்டி
அடிமையாகும்
நீதி!

இறந்த மனிதனின்
இதயம் வாழும்
உறுப்பு தானம்!

மழலைப் பூவுக்குத்
தேனூட்டுகிறது
தொப்புள் கொடி!

அமைதியை நிலைநாட்ட
ஆயுதங்களின் பக்கம்
காவல்துறை!

எத்தனை நதிகளைக் குடித்தாலும்
தணியாத தாகம்
கடலாசை!

எச்சில் பதவிக்கு
எத்தனை கோடி செலவு?
ஏழை இந்தியா!

தீவிர வாதம்
ஒழிக்கப் படத்தான் வேண்டும்
உருவாக்கியவர்களை?

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

AUG 16, 2007

Monday, November 26, 2007

நாம் எப்படி?

மும்மாறி பொழியவில்லை

வரட்சி வாடுகிறது

பஞ்சம் பொசுக்குகிறது

பரிகாரம்தான் என்ன?


'கழுதைக்கும் கழுதைக்கும்(அ)

கழுதைக்கும் தவளைக்கும்

மணம் முடித்தல்'

ஐதீகம்

செய்து பார்க்கின்றோம்!


பையனுக்குச் செவ்வாய் தோழம்

பரிகாரம் என்ன?

'வாழைமரத்துக்குத்

தாலி கட்டுவியுங்கள்'

ஐதீகம்

செய்து பார்க்கின்றோம்!


நாற் சந்தி!

மேள தாளம் முழங்க

காளைக்கும் பசுவுக்கும்

வரதட்சணையில்லா திருமணம்

நடத்தி வைக்கின்றான்

பூம் பூம் மாட்டுக்காரன்!

பார்த்து ரசிக்கின்றோம்.


நாட்டில் ஊரில் எத்தனை

முதிர்கன்னியர் இன்றைக்கும்!

பரிகாரம் என்ன?

சிந்தித்திருப்போமா?


'நல்லார் ஒருவர் உளரேல்

அவர் பொருட்டு எல்லோருக்கும்

பெய்யும் மழை' என்கிறது

பழம்பெரும் பாட்டு!


மழை பெய்யாமைக்கு

நல்லோரில்லாமையே காரணமா?

மற்றவரில் நல்லோரில்லை சரி!

நாம் எப்படி?

-திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்.

Thursday November 15, 2007.

தண்டவாளங்கள் !!

என்ன கருத்து வேறுபாடோ?

ஒன்றோடொன்று

ஒட்டவுமில்லை

உறவாடவுமில்லை

ஒரே நோக்கில்

தத்தம் போக்கில்!


அவசரமா?

அவசியமா?

நம்பி வந்தோரை

உரிய நேரத்தில்

உரிய இடத்தில்

ஒழுங்காய்ச் சேர்த்திடும்

நாணயம் காத்திடும்!


தன்மேல் வீசிடும்

எச்சங்கள்

கழிவுகளுக்காக

எவரையும்

ஏசுவதுமில்லை

நிந்திப்பதுமில்லை!


தற்கொலை

எண்ணத்தில்

தன்னைத்

தேடி வருவோரை

தடுப்பதுமில்லை

பாதுகாப்பதுமில்லை!


சிறுமதியாளர்

சதி

செய்தாலன்றி

தன் கடமையில்

சிறிதும்

தவறுவதில்லை!


தன்

உறுதியில்

கொஞ்சமும்

தளர்வதுமில்லை

விட்டுக்

கொடுப்பதுமில்லை!


தண்டவாளம் போன்றே

வாழ்க்கை

வாழ்ந்திடும்

எத்தனையோ தம்பதியர்

அன்றாட வாழ்வில்

நம் சந்திப்பில்...!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-11-2007.

சேமித்து வைத்தது...! !

படிக்கின்ற காலத்திலேயே

இலட்சாதிபதி ஆகிவிட

இலட்சிய கனவுகள்!


பட்டக் கல்வி முடித்து

ஈராண்டு அனுபவம் பெற்றதும்

தேடிவந்தது வெளிநாட்டு வேலை!


இலட்சத்தின் இலட்சியத்தை

நான் அடைந்த போது

இலட்சம் தன் மதிப்பிழந்தது!


வானமே எல்லை!

முயற்சி திருவினையாக்கும் -ஆகவே

கோடீஸ்வரன் ஆகும் ஆசை!


கோடியை நான் எட்டிய நேரம்

கோடிக்குக் கோடி

கோடியும் மதிப்பிழந்தது!


தாயகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்

முயற்சி உழைப்பு தியாகம்

அனைத்தும் விரயமாகப்பட்டது!


இருப்பினும் மனதில் அமைதியும் திருப்தியும்

சம்பளத்தைத் தான் சேமித்திருக்கிறோம்

சாபத்தை அல்ல...!


- இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-10-2007.

ஆடிச் சிறப்புத் தள்ளுபடி!!

சிங்காரச் சென்னை மாநகரில்

மட்டுமின்றி

தமிழகம் முழுவதும்

ஆட்டம்! பாட்டம்!

கொண்டாட்டம்!

ஆனியில் துவங்கி

ஆவணியிலும் கூட

தொடரும்

ஆடிச் சிறப்புத் தள்ளுபடி!


தங்கம், வைரம்

துணிமணிகள்

இல்லத் தேவைகள்

அனைத்துமே

மலிவு விலையில்

விற்பனையாம்!


காட்டாற்று வெள்ளமாய்

மக்கள் கூட்டம்!

நெக்கித் தள்ளும்

கூட்ட நெரிசல்!

சிக்கியவருக்கோ

கை கால் குடைச்சல்!

உடனிருப்பவருக்கோ

மூளை உளைச்சல்!

இருந்தும் தவிப்பில்

மக்களின் அலைச்சல்!


வணிக வளாகங்களில்

திருவிழாக் கோலம்!

பார்க்கப் பார்க்கப்

பரவசம் தான்!

தள்ளுபடிக்கே

இக்கூட்டம்!!

இலவசமென்றால்

என்னாவது...?

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-9-2007.

தனிக் குடித்தனம் !!

பொருள்

சேர்க்கும் நோக்கில்

பந்த பாசங்களைத்

தொலைத்து விட்டு

நிம்மதி இன்றி

அலைந்து கொண்டிருப்பவர்கள்!


கூட்டுக் குடும்பம்

பிரச்சினை யென

ஓடி ஒளிந்து

இன்று தாமே

பிரச்சினையாகி விட்டவர்கள்!


இன்றைய இளைஞர்களிடம்

நிலவும்

ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு

தம்மை அறியாமலேயே

காரணமாகி விட்டவர்கள்!


சொத்துக்கள் செல்வங்களை

சொந்தமாக்கிக் கொண்டு

பந்த பாசங்களிடமிருந்து

வெகுதூரம்

சென்று விட்டவர்கள்!



பாவம் இவர்கள்!

அன்னை தந்தையையும்

உடன் பிறப்புகளையும்

ஒதுக்கி விட்டு

ஆன்மீகத்தில்

அமைதியைத் தேடிடும்

பரிதாபத்துக்குரியவர்கள் !!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-7-2007.

ஹைக்கூ கவிதைகள்...!!

விழியருவிகள்
பிரியும் உறவுகள்
பன்னாட்டு விமான நிலையம்!



வசந்தம் தேடிகளின் கண்ணீர்
வளைகுடாவில்.....
அருவிகள்!



ஈரமில்லா ஆறுகள்
இரக்கமில்லா மனிதர்கள்
மணல் கொள்ளை!



ஆண் பெண் சமத்துவம்
தாய்ப்பால் ஆணுக்கு
கள்ளிப்பால் பெண்ணுக்கு.



முகவிலாசம்
கிறுக்கிக் கிடந்தன
வறுமைக் கோடுகள்!


குற்றவாளி வெளியில்
நிரபராதி சிறையில்
நீதிக்குத் தண்டனை!



சாலையில் கிடக்கிறது
சல்லி சலியாய்.....
மலையின் ஆணவம்!



உயர்ந்தவன் நீ!
யார் வைத்த ஐஸ்?
இமயம்!



வாழ்த்தும்
வசைபாடும்
எச்சில் வாய்!



கையில் குடம்
கண்ணில் நீர்
மரம் வெட்டிக்கும்.

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

30-6-2007.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்....!!

சமுதாயத்துக்கு இறைவனால்

அருளப்பட்ட வரங்கள்!

மண்ணுலகில் தோன்றிய

தேவதைகள்!

பார்வைக் கெட்டா

ஊனங்கள் நிறைந்தவர்கள்

மத்தியில்

குறை தெரியப் பிறந்திட்ட

குணவாதிகள்!


இன்னாரே இவருக்குச்

சிறந்த பெற்றோர்!

இவரால் இக்குழந்தை

ஏற்றம் பெறும் என

இறைவனால்

தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு

மட்டுமே குழந்தையாய்

அருளப்பட்டவர்கள்!


இக்குழந்தைகளைப் பெற்றவருக்கு

குறை தெரியும்

வருத்தம் இருக்கும்

கவலை மிகும்

வேதனை பெருகும்

எதிர்காலம் கேள்வியாகும்

பொறுமை காப்பீர்!

சற்றே சிந்திப்பீர் !


குறைகளை மட்டுமே

கண்ணுறும் ஊனமிக்க

சமுதாயத்தில்....

இவர்களின்

பிறப்பின் சிறப்பு

இதயக் கண்ணுள்ளவர்க்கு

மட்டுமே புரியும்

உண்மை!


குறைகளைப் பந்தயமாய்

எதிர்கொள்வோர்

சாதனையாளராகின்றர்!

இருந்தும் வாழ்கின்றர்!

இறந்தும் வாழ்கின்றர்!

சுதா சந்திரனும்,

ஜெயபால் ரெட்டியும்

இன்றைய நட்சத்திரங்களாய்த்

திகழ வில்லையா?

வேகமாய் முன்னேறி வரும்

இப்புவியில் நிச்சயம்

ஒர் எதிர்காலம்

காத்திருக்கிறது!


உலக நடப்பில்

ஒரு நோட்டமிடுவீர்!

எத்தனை பெற்றோர்

தருதலைகளையும்

சமூகவிரோதிகளையும்

சதிகாரர்களையும்

சமூகக் கேடர்களையும்

முதிய பெற்றோரை வீதியில்

விட்டுச் செல்பவர்களையும்

குழந்தையாய்ப் பெற்றுவிட்டு

கண்ணீர் வடித்துக்

கொண்டிருக்கிறார்கள்!


சொத்தும் சொந்தமும்

கைவிட்டுப் போதல் கூடாதென

நெருங்கிய இரத்த சொந்தங்களில்

மணம் முடித்தல்,

தாய்மையாய் இருக்கும் போது

கருகலைக்க முயற்சித்தல்,

கருவிலிருக்கும் போதும்

பிறந்த பின்னரும் நேரும்

விபத்துக்கள்,

மூளை காய்ச்சல் போன்றவைதான்

இத்தகையக் குழந்தை

பிறப்புக்குக் காரணம்!


இவர்கள்

பாவம் அறியாதவர்கள்

பாவம் நினையாதவர்கள்

பாவம் செய்யாதவர்கள்

பாவம் தூண்டாதவர்கள் .....

பாசம் வேண்டுபவர்கள்

நேசம் கொள்பவர்கள்

கனிவும் கவனிப்பும்

தேவையானவர்கள்

நிந்திக்கப்பட வேண்டியவரல்லர்-

இவர்கள் .....

சிந்திக்கப்பட வேண்டியவர்கள்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

15-6-2007

குழந்தைத் தொழிலாளி !!

'பழைய சோறு தின்று விட்டு

பள்ளிக் கூடம் சென்றிட்டு

படிப்புதனைக் கற்று வந்தது

போதுமடா கண்ணா!

வீட்டில் எரிக்கச் சுள்ளியில்லை,

பொங்குதற்கு அரிசியில்லை,

என் கூலி வருமானம்

ஒரு வேளைக்குப் போதவில்லை,

நிறைவாய்ப் படிக்க வைக்க

நாதியாய் எவருமில்லை.

இருப்பது கொண்டு படிக்கவைக்க

இல்லாமை தவிர வேறில்லை.


"குடிக்காதே! குடிக்காதே!"என்று

அடித்துக் கொண்டேன் என் தலையில்

கேட்டானா? பாவி மனிதன்

நிறுத்தாமல் குடித்திட்டான்

ஈரல் நோயால் படுத்திட்டான்.

கடன்தனை ஏற்றி விட்டு

கண்களையும் மூடிட்டான்.


'நீயும் என்னுடன் வந்திடடா!

எசமானரிடம் சொல்லிடுவேன்,

வேலை வாங்கித் தந்திடுவேன்.

இருவரும் உழைத்திடுவோம்

உன்னுடன் பிறந்தோரைக் காத்திடுவோம்'.

சொன்ன தாயும் ஊனமானாள்

சாலை விபத்தினிலே!


ஈரைந்து வயதினிலே

ஓரைந்து உடன் பிறப்புக்கள்!

உழைத்துச் சம்பாதித்து

காக்கும் பொறுப்பிவனுக்கு.

நாள் முழுக்க உழைத்திட்டாலும்

பெருமானமில்லா வருமானம்.

இருந்தும் காக்கிறதே தன்மானம்!

இப்படியே தொடர்ந்திட்டது

வாழ்க்கையும் சில காலம்.

இப்போதோ வந்து விட்டது

வேலைக்கும் போதாக்காலம்!


'குழந்தைகளைத் தொழிலாளியாய் வேலைக்கு

வைக்காதே' என்றது புதுச் சட்டம்.

அதன் பயனாய் கிடைத்திட்டது

பரிசாய் இவனுக்கு வேலை நீக்கம்!

விற்றுத் தின்ன மிச்சமில்லை

வேறு வழி தெரியவில்லை

எளிதாய் சம்பாதிக்க

பிச்சையைத் தவிர வழியில்லை!

இத்தொழிலிலிருந்து இவனைக் காக்க

சட்டத்திற்கு நேரமில்லை!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-6-2007.

எய்ட்ஸ்...!!

'எய்ட்ஸ்'

கேட்டு கையேந்தியது

ஒரு காலம்!

இன்றோ

'எய்ட்ஸ்'

கேட்டு ஓடிடுவர்

பல காதம்!


வேண்டாத சேர்க்கை

நல்லொழுக்கமின்மை

இதுவே இதற்கு

மூலக் காரணம்!

நினைவில் கொள்!

இல்லையிது

சாதாரணம்.


நோய்கள்

பலவுண்டு

இவ்வையம் தனில்!

பார்ப்பவர்

வருந்துவர்

பரிதாபப்படுவர்

பச்சாதாபம் கொள்வர்!


'எய்ட்ஸ்' நோயாளியைக்

காண்பவரோ

அச்சம் கொள்வர்

இழித்துரைப்பர்

பாராமுகம் கொள்வர்!


இது

சமூகத்துக்கோ

பெரும் கேடு!

குடும்பத்துக்கோ

ஆறா வடு!


தமிழில்

'உருக்கு நோய்'

என்று இதற்குப்

பெயர்!

உருக்கிவிடும்!

உருக்குலைத்துவிடும்

உடலை

உயிரை

உள்ளத்தை

செல்வத்தை

நம்பிக்கையை

நற்பெயரை.


இதன்

தோற்றம்

அவமானச் சின்னம்!

முடிவு

நினைவுச் சின்னம்!


தடையின்றி

நடக்கிறது

விபச்சாரம்!

'ஆணுறை அணிந்திடுக'

அரசின் பிரச்சாரம்!


ஏழ்மை

சமுதாயத்தின்

தாழ்வு!

'எய்ட்ஸ்'

சமுதாயத்தின்

அழிவு!

இழிவு!!


சபலம் விடுத்து

நல்லொழுக்கம் கொண்டு

அறிவுப் பூர்வமாய்

அணுகினாலன்றி

'எய்ட்ஸை'

ஒழிக்க இயலாது!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

15-5-2007.

நாய்களின் உறுமல் !!

நாயே! நாயே! நாயே! என்று
நா கூசாமல் ஏசுகின்றீர்!

நன்றி மிக்க எங்களை ஏசி
நன்றியை மறக்கின்றீர்!

மனைவியை மக்களை மற்றவரை ஏச
எங்களைக் குறிக்கின்றீர்!

அவர்கள் நல்லது செய்து பாராட்டும்
வேளையில் எங்களை ஏன் மறக்கின்றீர்?

நீங்கள் கொடுப்பதைத் தின்று
காவல் காத்தும் எங்களைத் திட்டுகின்றீர்!

நாங்கள் இல்லாத வீட்டில் களவு போனால்
எங்களை நினைக்கின்றீர்!

திருட்டுக்களையும், தவறுகளையும்,
கூசாமல் செய்கின்றீர்!

எங்களின் உதவியால் பிடிபட்டு விட்டால்
'நாய்' காட்டிக் கொடுத்து விட்டதென்கின்றீர்!

பிடிபட்ட திருடரை திட்டுவதென்றால்
'திருட்டு நாயே' என்கின்றீர்!

உங்களில் எவரும் நன்றி மறந்தால்
'நன்றி கெட்ட நாய்' என்கின்றீர்!

நன்றியுள்ள பிராணி நாங்கள்
என்பதை உணரவும் செய்கின்றீர்!

நாங்கள் செய்திடும் கடமையைப் பல
சமயங்களில் பாராட்டவும் செய்கின்றீர்!

உங்களுக்குள்ளிருக்கும் உயர்ஜாதி தாழ்ஜாதியாய்
எங்களையும் பிரித்து விட்டீர்!

உங்களுக்குள்ளிருக்கும் உயர்நிலை தாழ்நிலை
எங்களுக்கு மளித்து விட்டீர்!

உங்களுக்குள்ளிருக்கும் ஜாதி மதக்
கலவரம் எங்களுக்குளில்லை ஐயா!

எங்களுக்குள்ளிருக்கும் நன்றி மறவாமை
உங்களுக்கேனில்லை ஐயா?

நாங்கள் குரைத்தாலும், கடித்தாலும் பிறரை
எப்போதும் கொலை செய்வதில்லை ஐயா!

நீங்களும் திருந்தி பிறருயிர் காத்திட
முன்வர வேண்டுமையா!

-இமாம். கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

30-4-2007

தீக்குச்சி மனிதர்!!

தலை இருக்கிறது

மூளை இல்லை

மண்டை கனம்

சிந்திப்பதில்லை

எவரெவர்

எத்தகையப் போக்கில்

எப்படிப்

பிரயோகித்தாலும்

எளிதாய்ப் பற்றி

எரிந்தும்

எரித்தும் விடும்

தீக்குச்சி போல்!

மனிதரிலும்

பலர்.

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-4-2007.

வாழிய செந்தமிழ்!!

சாதிகள் ஆயிரம்!
பேதங்கள் ஆயிரம்!
வழக்கங்கள் ஆயிரமுண்டு!
ஆயினும் தாய்மொழி
யாதெனக் கேட்பின்
'தமிழ்' ஒன்றே சொல்வர்!

கட்சிகள் எண்ணிலா!
காட்சிகள் எண்ணிலா!
பாகுபாடுகள் எண்ணிலாவுண்டு!
ஆயினும் உன்னினம்
என்னெனக் கேட்பின்
'தமிழன்' என்றே சொல்வர்!

இந்தியாவே தாயகம்!
இலங்கையே தாயகம்!
மலேசியாவே தாயகமென்பர்!
ஆயினும் உரைப்பது
எம்மொழி கேட்பின்
'தமிழ்' என்றே சொல்வர்!

கடல் கடந்து
மலை கடந்து
புலம் பெயர்ந்து போயினும்
குலம் மறந்து
மனம் இணைக்கும்
வாழிய எம் செந்தமிழ்!!

-இமாம். கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

15-3-2007.

சிகரெட்?

நீ
நெருப்பு வைக்கிறாய்
அது உன்னையும்
உன் பணத்தையும்
கரியாக்கிக் கொண்டிருக்கிறது

நீ
இழுத்து விடுகின்ற புகை...
உன்னைக்காட்டிலும்
உன்னுடன் இருப்போரை
அதிகம் பதம் பார்க்கின்றது

நீ
காசு கொடுத்துப்
புகைப்பதை - உன்
உடனிருப்போர்
இலவசமாய்....

நீ
நாள் தோறும்
புகைக்கின்றாய்
ஒரு நாள்......!
நீயே
புகையாகப் போகின்றாய்
உனை அறியாமலேயே.

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-3-2007

மண்ணாசை !!

எவனோ படைத்திட்ட
நிலத்துக் கிங்கே
சொந்தங்கள் பந்தங்கள்!
விலை நிர்ணயங்கள்!
விற்பனைகள்... வரிகள்!

சொத்துக்களைச்
சொந்தமாக்கிக் கொள்ள
வாதங்கள்.... வழக்குகள்!

சொந்தங்களைப் பகுத்துக்காட்ட
வரப்புகள் வரைகோடுகளென
எல்லைகளாம்.... ஏளனங்கள்!

வரப்புகளில்
நீரைப் பாய்ச்ச
வெட்டுக்குத்துக்கள் விபரீதங்கள்!

சொத்துக்களுக்காக
நீதிமன்றம் சென்று
சொந்தங்களை
இழந்து நிற்கும்
அவலங்கள்.... பரிதாபங்கள்!

மண்ணுக்காக
சம்பவிக்கும் மரணங்கள்...
மண்ணுக்கே இரையாகிவிடும்
மனிதப் பிணங்கள்!

இத்தனைக்குப் பின்னுமிங்கே
இனிதே தழைத்தோங்கும்
மண்ணாசை!

- இமாம். கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலத்தில்.

15-2-2007.

Sunday, November 25, 2007

மனிதாபிமானம் !!

சாலை யோரத் திலோர்
மனிதப் பிணம்!
ஈக்களும் எறும்புகளும்
அதனைச் சுற்றிலுமே!

சாலையில் சென்றிடும்
மனித யினமதைக்
கண்டும் காணாமல்
போகுது பார்!

சற்றே தூரத்திலோர்
காக்கைப் பிணம்!
அங்கே கூடிக்கரையிது
காக்கை இனம்!

பசுவதைக் கெதிராய்
ஓர் இயக்கம்!
தெரு நாயைக் காக்க
ஓர் இயக்கமென
பிராணிகளைக் காக்கப்
பல இயக்கம்!

மனிதனைக் காக்க
ஏனில்லை?

சாலையிலே ஓர்
விபத்தென்றால்
முதலுதவிக்கு மங்கு
நாதியில்லை!

தெருவிலே யொருவனுக்குக்
கத்திக் குத்து....
அடுத்த நொடியிலங்கு
எவருமில்லை!

துடிதுடித்துச் சாகும்
மனிதன் வாயில்
குவளை நீரூற்றுதற்கும்
எவருமில்லை!

ஆறறிவு பெற்ற
மனிதராம் நாம்!!
எங்கே தொலைத்தோம்- நம்
இதயத்தை?

- இமாம். கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலத்தில்.

1.2.2007

விதையின் பயன் !!

ஊன் கொடுத்து

உயிர் கொடுத்து

உதிரம் கொடுத்து

உறவு கொடுத்து

உரிமை கொடுத்து

உயர்வு கொடுத்து

ஊக்கம் கொடுத்து

ஆக்கம் கொடுத்து

அறிவு கொடுத்து

ஆற்றல் கொடுத்து

ஆளாக்கி விட்ட

அன்னை தந்தைக்குப்

புத்திரன் கொடுத்திட்டப்

புகலிட மின்று

முதியோரில்லம்!

நல் விதைதான்

விதைத் திருக்கிறாய்

அன்பு மகனே!

நீயும் முன் பதிவு

செய்து கொள்

நாளைய உலகில்

உனக்கோர் புகலிடம்.....!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஜூன் 07 2007

மீசை !!

முகத்தில் மீசை!
ஆடவரின் அழகு
வீரத்தின் அடையாளம்
நாகரிகம் என
தொன்று தொட்டு
வரும் பழக்கம்
வழக்கம்!

அரும்பு மீசை
முறுக்கு மீசை
கத்திரி மீசை
சுருள் மீசை
எறால் மீசை என
எத்தனையெத்தனையோ
மீசைகள் இலக்கியத்தில்
வரலாற்றில்
நடைமுறையில்..

இக்கால
ஆடவருக்கோ
முழுக்க
மழித்த முகமே
அழகு
ஆசை
கவர்ச்சி
நாகரிகமாம்!

அதனால் தானோ
என்னவோ?
கரப்பானை
அஞ்சும் அளவு
கணவனை
அஞ்சுவதில்லை
இக்கால மகளிர் !

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மே 31 2007

மரியாதை?

நாட்டின் விடுதலைக்குப்
போராடியவர்கள்!
தியாகிகள்! தலைவர்கள்!
அறிஞர்கள்! அமைச்சர்கள்!
இவர்களின் சேவையைப்
பாராட்டியும் போற்றியும்
மரியாதை செய்வது
உயர் எண்ணம் தான்!

நாம்
பொதுவிடங்களில்
சிலைகள் வைக்கின்றோம்!
பறவைகள்
எச்சமிட்டுச் செல்கின்றன!

நாம்
அஞ்சல் தலைகள்
வெளியிடுகின்றோம்!
அஞ்சல் ஊழியர்கள்
அவர்கள் முகத்தில்
முத்திரை குத்துகின்றனர்!

நாம்
அவர்கள் படங்களை
ரூபாய் தாள்களில்
அச்சிடுகிறோம்!
அப்பணம் இலஞ்சமாய்
விநியோகிக்கப் படுகிறது!

நாம்
அவர்களின்
உருவப் படங்களை
அலுவலகங்களில்
வைக்கின்றோம்!
அவ்விடங்கள்
ஊழல்வாதிகளின்
புகலிடமாகின்றன!

எதிர்வரும்
சந்ததியினருக்கு
வழிகாட்டிகள் நாம்!
அறிவுப் பூர்வமாய்
நாம் செய்வது
மரியாதை தானா ?

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மே 17 2007

வரதட்சணை!!

மணச் சந்தை -
மானம் ஈனம்
சூடு சுரணை
சுயமரியாதை
ஆண்மை
எல்லாமெ விற்பனைக்கு!

படிப்பு பட்டம்
பணி பாரம்பரியம்
தகுதி தராதரத்துக் கேற்ப
விலைகளும்
பேரங்களும்!

மனசாட்சியைத்
தொலைத்து விட்டுக்
கை யெழுத்தாகிறது
மண ஒப்பந்தம்!
சாட்சியாய்
சொந்தங்கள் பந்தங்கள்!

கந்துவட்டிக்காரர்களாய்
உருவெடுக்கிறார்கள்
பிள்ளை வீட்டார்!
கொத்தடிமை ஆக்கப்படுகிறாள்
மணப் பெண்!

பெண்ணைப்
பெற்ற கடன் ....
கேட்கும் போதெல்லாம்
கொடுக்கும்
நிர்ப்பந்தத்தில்
பெண் வீட்டார்!

பிள்ளையைப்
பெற்ற கடனும்....
வளர்த்த செலவும்
வசூலிக்கும் நிலையில்
பிள்ளை வீட்டார்!

பொன் முட்டையிடும்
வாத்தாய்
இருத்தல் வேண்டும்
மணப் பெண்!
அன்றேல்
விளக்கேற்ற வந்தவளின்
வாழ்க்கை விளக்கு...?

மண்ணிலே
பிறந்த பெண்ணுக்கு
மண்ணெண்ணெய்
செந் தீயால்
அபிஷேகம்!

பெண்ணினத்துக்கு
இழைக்கப்படும்
கொடுமைகள் அநீதிகள்!
பெண்களே காரணமாய்
இருக்கும் நிலைமைகள்
அவலங்கள்!

மனிதம் செத்துவிட்ட
சமுதாயத்தில்
மானங் கெட்டவர்களின்
பெருக்கம்!

பணத்துக்காக
விலை போகும்
பெண்ணை
சமூகம்
அழைக்கும் பெயர்..
வேசி!

வரதட்சணையின் பெயரில்
பணத்துக்கும் பொருளுக்கும்
விலை போகும்
ஆண்களையும்
அவர்களுக்கு உடந்தையாய்
இருப்போரையும்
என்னென்று அழைப்பது...?

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மே 10 2007

கற்பனையில் கனவுகளில்......!!

நம் நாட்டில்
பண்டிகைக்குப் பண்டிகை
பட்ஜெட்டுக்குப் பட்ஜெட்
இலவசமாய்
அரிசி,
சேலை, வேட்டி
காலணிகள்
மின்சாரமெனப்
பல இலவசங்களின்
அறிவிப்பு
அரசின் சார்பில்......
இலவசம் எப்படி அய்யா?
மக்களின் வரிப்பணம் தானே!

வயல்களில் உழைத்திடுவோர்
மாளிகைகள் கட்டிடுவோர்
சாலைகள் அமைத்திடுவோர்
துப்புரவு செய்திடுவோர்
சுமைவண்டி இழுத்திடுவோரெனப்
பற்பல உழைப்பாளியர்
காலம் காலமாய் நம்நாட்டில்
சமுதாயத்தின் ஏணிப்படிகளாய் -இவர்
உழைப்புக்குக் கிடைக்கும் கூலி
உண்டிக்கும் உடுப்புக்குமே.....
இவர் உயர்நிலை காண்பதெல்லாம்
கற்பனையில்! கனவுகளில்!

தேர்தலுக்குத் தேர்தல்
வீதிதோறும் கோஷங்கள்.....
'உழைப்பவர்க்கே நிலம் சொந்தம்'
'கட்டுவோருக்கும் வீடு சொந்தம்'
இயற்கையில் படைக்கப்பட்ட
நிலத்துக்கும் நீருக்கும் வரி! விலைகள்!
இலவசமாய்க் கிடைப்பதிங்கே
சுவாசிக்கும் காற்றொன்றே!
மற்ற சுகம் காண்பதெல்லாம்
கற்பனையில்! கனவுகளில்....!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஏப்ரல் 26 2007

நோய் !!

பேரூரின்

மருத்துவ மனையில்

புறநோயாளியாய்

உட்புகுந்தேன்!

நுழைவுச் சீட்டு வாங்க

முதலில் தட்சணையாம்!

பரிசோதிக்கும் மருத்துவருக்குத்

தனியாய் ஒரு கட்டணமாம்!

நுண்கதிர்,இரத்தம்,

இது போல்

இதரச் சோதனைகட்கும்

அன்பளிப்பு தனித்தனியாய்....

ஊசிக்கும் மருந்துக்கும் கூட

ஏற்றாற் போல் விலைகளய்யா!

அரசின் மருத்துவமனையாம்

இலவசமாய்

சிகிச்சை இ(எ)ங்கே....?

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஏப்ரல் 19 2007

விவாகரத்து!!

மலை போல்
உயர்ந்து விட்டது
விலைவாசி!
மலிவாகிக் கொண்டிருக்கின்றன
விவாகரத்துக்கள்!

இல்லாமை
இயலாமையால்
கன்னியாராகவே
காலத்தைக் கழித்திடும்
கணக்கில்லா
எண்ணிக்கையில்
எத்தனையோப் பெண்கள்
இப்படி இருக்க....

மனப் பொருத்தம்
பார்த்து
மணம் புரிந்தோர்
மத்தியிலும்
மிகைந்து வருகின்றன
மணமுறிவும்
மனமுறிவும்...

பணப் பொருத்தம்
பார்த்து
வரதட்சணைக்கு
விலைபோனோர்
மத்தியிலும்
மலிவாகிவிட்டன
விவாகரத்துக்கள்!

பெயர் பொருத்தம்
ஜாதகப் பொருத்தம்
பார்த்து
நிச்சயிக்கப் பட்ட
திருமணங்களும்
மணமுறிவில்
மனமுறிவில்...

ஒத்துப் போகாமல்
ஒதுங்கிக் கொள்பவர்கள்
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
நாள்தோறும்
அநாதைக் குழந்தைகள்!

அறியாமையில்
உழல்பவர்கள்
அமைதியாய்
இல்லறத்தில்!
அதிகம் படித்தவரே
விவாகரத்து
வழக்கு மன்றங்களில்!

பொறுமை
புரிந்து கொள்ளல்
விட்டுக் கொடுத்தல்
எல்லாமே
தேய்பிறையாய்.....
குழந்தைகள் ஆடும்
பொம்மைக் கல்யாணம் போல்
கேலிக்குறியதாகி விட்டிருக்கிறது
திருமணப் பந்தம்!

பண்பாடு
பாரம்பரியம்
கலாச்சாரப்
பெருமை யெல்லாம்
என்று உணரும்?
நம் சமுதாயம்!

மலை போல்
உயர்ந்து விட்டது
விலைவாசி!
மலிவாகிக் கொண்டிருக்கின்றன
விவாகரத்துக்கள்!!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஏப்ரல் 12 2007

உறுதிகொள் தமிழா!!

மனிதன் ரசிக்கும்
கருங்குயில் பாட்டு
குயிலின் மொழிதானே?

பச்சைக் கிளியும் தன்
இனத்துடன் பேசிடும்
கிளியின் மொழிதானே?

காக்கை கரைந்து
கூட்டம் சேர்த்திடும் தன்
காக்கை மொழியில் தானே?

பறவைகள் மிருகங்கள்
உறவாடிடும் மொழியும்
அதனதன் தாய்மொழி சரிதானே?

மாற்றார் மொழியில்
பயிலுதல் பேசுதல்
தவறில்லை; சொல்கின்றாய்!

தாய்மொழி தமிழில்
பயின்றிட பேசிட
கூச்சமேன் கொள்கின்றாய்?

விஞ்ஞானம் கணிதம்
எல்லாமே உண்டு
அம்மொழியில் என்கின்றாய்!

உன்மொழியில் இருக்கும்
விஞ்ஞானம் கணிதம்
பயில ஏன் மறுக்கின்றாய்?

நீ வளர்ந்த மொழியை
நீ வளர்க்க மறுத்தல்
நியாயமோ? சொல் தமிழா!

நாமும் வளர்ந்து-நம்
மொழியும் வளர்த்திட
உறுதிகொள் நற்றமிழா!!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மார்ச் 01 2007

'கோழிகளின் குமுறல்' !!

கொக்கரக்கோ எனக் கூவி
விடியலிலே விழிக்க வைத்து
விடிந்ததை உணர்த்தி விட்டு
இனிமையாய் எங்களுடன்
கொக் கொக் கொக் என
காதல் மொழி பேசி
கூடி இன்பம் கண்ட
சேவல் இனத்தினை
செயற்கை கரு எனும் சதியால்
பிரித்து விட்ட மானிடரே!

எங்களின் காதலை அழித்து விட்டு
நீங்கள் மட்டும் காதல் காதலென
காவியங்கள், காப்பியங்கள்,
வரலாறுகள், திரைப் படங்கள்,
காதலுக்காக தாஜ்மஹால்,
வசந்த மாளிகை என
காதல் சின்னங்கள் எழுப்புகின்றீர்!
எங்களின் இயற்கைக் கூடலை
கூடாமல் செய்து விட்டு
நீங்கள் மட்டும் இயற்கைக் கூடலையும்
வேண்டாத சேர்க்கையையும்
நாடுவதென்ன நியாயம்?

எய்ட்ஸ்சும் பால்வினையும்
தந்திட்டப் பாடந்தனை அறியீரோ?
வயகராவையும் லேகியத்தையும்
தேடி ஓடும் இந்நாளில்
வயகரா வேண்டாத எங்களுக்கு
வாய்த்திட்ட வாய்ப்பை ஏன் மறுக்கின்றீர்?
இயற்கையாய் ஈன்றிடவே
என்றென்றும் விரும்பிடும் நீர்
இனதைப் பெருக்க எங்களுக்கு
இன்குபேட்டர் ஏன் தந்தீர்?

இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்
எனும் குடும்பக் கட்டுப்பாடு உங்களுக்கு,
இருக்கும் வரையில் முட்டையிட்டு
ஓடாய்த் தேயும் நிலை எங்களுக்கு!
யாமிடும் முட்டைகளை
முழுமையாய் விழுங்கிவிட்டு
கோழிகளாகிய எங்களையும்
குர்மாவாய் செய்து உண்டு
கொழுத்துப் பெருத்திடும் மானிடரே!
எங்களினத்தை அழிக்காதீர்!

உங்களின் கொலஸ்ட்ராலையும்
அதிகரிக்காதீர்!
நாங்கள் இயற்கையாய்
வாழ்ந்திடவே விரும்புகின்றோம்.
திருந்திடுவீர் மானிடரே! மீண்டும்
திருப்பிடுவீர் எங்கள் காதல் வாழ்வை !

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

பிப்ரவரி 08 2007

ஆர்ப்பாட்ட வாழ்க்கையில்....!!

ஆர்ப்பாட்ட வாழ்க்கையில்....!!
------------------------------

# உயிர் வதை
எதிர்த்துப் போராட்டம்
பட்டாடைகள்
கம்பளி சால்வைகள்
தோல் பைகள்
காலணிகள் அணிந்தவர்கள்
ஆர்ப்பாட்டத்தில்...


# கட்டில்கள்
மேசை நாற்காலிகள்
அலமாரிகளென
வீடு நிறைய
மரச் சாமான்கள்
புதிதாய் எதுவும்
சந்தையில் வந்தால்
அதையும் வாங்கிட ஆசை!
இத்தனைக்கும் பிறகு
ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்
" மரங்களை வெட்டாதே! "


# "இறைச்சிக்காக
கால்நடைகளை அறுக்காதே!''
ஆர்ப்பாட்டம் செய்து
உண்ணா விரதமிருந்தவர்க்குப்
பாராட்டி விருந்து...
மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
புறா காடை
கௌதாரி சகிதம்...


# செடிகளைப் பறித்து
கீரையாய் உண்பர்
மூலிகைகள் கொய்து
மருந்தாய் உட்கொள்வர்
செடிகள் எதையும்
சிறுவர்கள் பறித்தால்...
கொதித் தெழுவர்
கண்டிப்பர்!
" செடிகளைக் கொய்யாதே!
பாவம் அவை..."


# 'உயிர்களைக் காப்போம்
உரிமைகளைக் கோருவோம்'
ஆர்ப்பாட்டம் செய்வர்
பெற்றவர்களையும் - தமக்குப்
பிறந்தவர்களையும்
முதியோர் இல்லங்களுக்கும்
விடுதிகளுக்கும்
அனுப்பிவிட்டு....!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஜனவரி 25 2007

பொங்கட்டும் பொங்கல்!!

பொங்கட்டும் பொங்கல்!!
-----------------------

பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
தமிழரின் இல்லந்தோரும்
பொங்கட்டும் இனியப் பொங்கல்!

இன்னல்கள் இடர்கள்
தீமைகள் துயரங்கள்
சோம்பல்கள் சுகவீனங்கள்
துரோகங்கள் பகைமைகள்
இல்லாமை கல்லாமை
அனைத்தையும் பொசுக்குவோம்
போகியின் நெருப்பில்.

நட்பைப் பெருக்குவோம்
நானிலம் தோரும்!
உழைப்பைப் பெருக்குவோம்
கல்வியைப் பரப்புவோம்
அனைத்து வளங்களும்
அனைவரும் பெற்று
நாட்டை உயர்த்தி
நாமும் உயர்வோம்!

இனிய பொங்கல்நாளில்
இதையே உறுதியாய்
கொள்வோம்!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

தமிழோவியம்.

ஜனவரி 11 2007

புதிய ஈராக்!!

புதிய ஈராக்!
------------

பேரழிவு ஆயுதங்களின்

தேடலுக்காகவும்

சர்வாதிகாரி சத்தாமின்

ஆட்சிக்கு முடிவுகட்டவும்

அமேரிக்க நேசநாடுகளின்

அத்துமீறிய பிரவேசம்.



மாபெரும் ஆயுதங்களை

முதுகுக்குப் பின்

வைத்துக் கொண்டிருப்பவர்கள்

அங்குல அங்குலமாய்

துருவித் துருவி

ஆராய்ந்ததில்

துண்டு பிளேடு கூட

கிடைக்கவில்லை யென்று

இன்று சொல்கிறார்கள்!


பெரும் புதைகுழிகளின்

தேடலில்

நாளும் தோண்டப்படுகின்றன

நூற்றுக் கணக்கில்

புதைகுழிகள்

இறந்தவர்களையும்

இருப்பவர்களையும்

புதைப்பதற்காக!


ஆக்கிரமிப்பாளர்களை

விரட்டுவதற்காக

சொந்த இனத்தவரையே

கொன்று குவித்துக்

கொண்டிருக்கிறார்கள்

இன மான ஈராக்கியர்!


சத்தாமின் ஆட்சியில்

நூற்றுக் கணக்கில்

இறந்தவர்களுக்கு

நீதி வழங்க

இலட்சக் கணக்கில்

கொன்று குவித்து

நியாயம் வழங்கிக்

கொண்டிருக்கிறது

அமேரிக்க ஏகாதிபத்தியம்!


சர்வாதிகாரி சத்தாமுடன்

தூக்கிலிடப்பட்டு விட்டன

ஈராக்கின் விடுதலை

இறையாண்மை

நீதி நேர்மை

அடிப்படை உரிமைகள்

எல்லாமே!


ஜனநாயகம்

நிர்மாணிக்கப் பட்டுக்

கொண்டிருக்கிறது

இலட்சக் கணக்கான

கல்லறைகளின் மேல்!

இப்பணி என்று முடியுமோ?

ஆவலில் உலக நாடுகள்!


கொடுங்கோல் ஆட்சியை

அகற்றாகிவிட்டது

புதிய ஆட்சி மலர்ந்துவிட்டது!

வளமும் வசதிகளும்

பெருகிவிட்டன!

மகிழ்ச்சிக் கடலில்

மக்கள்!

அமெரிக்காவில்.


புதிய ஈராக்!

உருவாகிக் கொண்டிருக்கிறது...

ஈராக்கியரின் கண்ணீரில்.

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

தமிழோவியம்.

ஜனவரி 04 2007

புத்தாண்டின் உறுதி!!

புத்தாண்டின் உறுதி!!
------------------

கல்லூரி

நாட்களிலே

தொற்றிக்கொண்ட

பழக்கமிது.


கல்லூரியை

விட்டுவிட்டேன்

பழக்கத்தை

விடவில்லை.


புத்தாண்டு

பிறக்கும் நாளில்

விட்டு விட

உறுதி கொள்வேன்.


தொடர்ந்திட்டது....

புத்தாண்டும்

பழக்கமும் தான்.


பெற்றோர்

உடன் பிறந்தோர்

உறவினர்

பெரியவரென

மரியாதைக்கு

மறைத்தும்

மறைந்தும்

தொடர்ந்திட்டது.....


வாரிசாய்

எனக்கொருவன்

பிறந்திட்டதும்

நல்லொழுக்க

ஞானோதயம்!

விட்டு விட்டேன்

புகைப்பழக்கம்!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்

டிசம்பர் 28 2006.

ஈகைத் திருநாள்!!

ஈகைத் திருநாள்!!
----------------------

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

கூறிடுமின்பத் திருநாளில்

உள்ளத்தின் குதூகலம் ஒருபுறத்தில்

இருந்துமோர் வருத்தம் உள்மனத்தில்

ஒருமாத காலம் நோன்பு நோற்று

உறவினரை நண்பரை வீட்டுக்கழைத்து

ஒன்றாயமர்ந்துண்டு நோன்பு திறந்து

ஐவேளை தொழுகை தவறாது செய்து

தறாவே தஹ்ஜூத் கூடுதலாய் சேய்து

ஓய்வு நேரத்தில் 'திருக்குரான்' வாசித்து

ஏழை எளியோர்க்கு அள்ளிக் கொடுத்து

தீயதைத் துறந்து நல்லவையே நினைத்து

அறிந்தோ அறியாமையிலோ செய்திட்ட

தவறுகட்கு மன்னிப்பு வேண்டி

இரண்டரை சதவீத மார்க்கவரி முறையாயீந்து

தேவையிலிருப்போர்க்கு உதவிகள் செய்து

பன்மடங்கு புண்ணியம் ஈட்டித்தரும் ரமதான்

இதற்குள் முடிந்ததில் வருத்தமே! எம் இறைவா!

இல்லாமையில்லா நிலைவேண்டும்! -எல்லோரும்

ஈருலக கல்வி பெற்றிட வேண்டும்!

தவறுகள் செய்யா மன உறுதி வேண்டும்!

செய்திட்ட தவறுகட்கு மன்னிப்பு வேண்டும்!

ஏற்றத் தாழ்விலா நிலை எல்லோர்க்கும் வேண்டும்!

பகைமை மறந்து நட்பு மலர வேண்டும்!

நோயிலும் துன்பத்திலுமுள்ளோர் துயர் நீங்கிடவேண்டும்!

பொறாமை பூசல்கள் அழிந்திட வேண்டும்!

ஈகைசெய்திடும் உள்ளம் என்றென்றும் வேண்டும்!

ஈயாருமீந்திடும் மனம் பெற்றிட வேண்டும்!

எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே! எம் இறைவா!

இவ்வினிய நேரத்தில் நீதான் அருள்புரிய வேண்டும்!

ஈத் முபாரக்!!!


திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

Thursday October 11, 2007

drimamgm@hotmail.com

ஆடும் கசாப்புக்காரனும்!!

ஆடும் கசாப்புக்காரனும்!!
--------------------------------
ஆடு!

கசாப்புக்காரனையே

நம்பிச் செல்லும்

என்பது பொது மொழி!

கழுத்துக் கயிறை இழுத்தும்

வாகனங்களில் கட்டியும்

கசாப்புக்காரனால்

பலவந்தமாய்

ஆடுகள்

கொண்டுச் செல்லப்படுவதைப்

பார்க்கையில்

கேள்விக்கும்

கேலிக்கும்

உரியதாகிவிடுகிறது

இப்பொது மொழி!


பேச்சில் தெரியும்

கறியின் விலையேற்றம்

ஈக்களைக் காட்டிலும்

மிகையாய் மொய்க்கும்

நுகர்வோரைக் காண்கையில்

பொய்த்துத் தான் போகும்!

தொங்கிக் கொண்டிருக்கும்

ஆட்டைத் துண்டு போட்டு

தசை சவ்வு எலும்புகளாய்ப்

பிரிக்கும் கை வண்ணம்

ஆகா............................!

கசாப்புக்காரனின் கையிலும்

என்னே

கலை நயம்!


மீன் சந்தையில்

நாள்தோறும்

மாறும் விலை!

பேரம் பேசினாலோ

மீனைக்காட்டிலும்

மிகையாய் நாறிவிடும்

மீன்காரரின்

பேச்சின் நிலை!


கசாப்புக் கடையிலோ

கறார் விலை!

எடையில்

கறியில்

புலப்படும் குறைகள்

அவரின்

மதிப்பில் மரியாதையில்

மறைந்துவிடும்!


எது

எப்படி இருப்பினும்

மூளை இருக்கிறதா?

கேட்டால்

புன்சிரிப்புடன்

பதில் கூறும் பாங்கு

கசாப்புக்காரரிடம் மட்டுமே!

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

Thursday September 20, 2007

drimamgm@hotmail.com

ஹை கூ..... !!

ஹை கூ..... !!
-----------------

இனவெறி படுகொலைகள்

புதுமையல்ல

காந்தியைக் கொன்ற நாடு!


சாலை விபத்தில் மரணம்

செத்துக் கிடந்தது

மனிதாபிமானம்!


மலர்க் கண்காட்சி

அலைமோதும் கூட்டம்

மூளியாய்ச் செடிகள்!


வந்தோர் ரசிக்க

வராதோரைத் தேடும்

கடலலைகள்!


விழித்துத்தான் கிடந்தோம்

வீட்டில் களவு

தொலைக்காட்சி!


வாழ்நாள் சேமிப்பு

பகல் கொள்ளை!

சீட்டுக் கம்பெனிகள்!


வெளிநாட்டு வேலைக்கு

விமானத்தில் பறக்கின்றன

காகிதப் பட்டங்கள்!


பழங்கால அரண்மனை

வௌவால்கள் வாசம்

காலத்தின் கைவண்ணம்!


பாலின்றி செத்தபின்

பால் தெளீப்பு....

குழந்தைக்கு!


ஆடையில் மனிதர்

குளிரில் செம்மறியாடு

கம்பளித் திருடர்கள்!


திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்.

drimamgm@hotmail.com

Thursday August 30, 2007

தம்பி நீ!!

தம்பி நீ!!
-----------

நீ

ஏணியாய்

இருந்து விடாதே!

உன்னை

மிதித்து

உயரே செல்வோர்

உன்னை

உதைத்துக்

கீழே தள்ளுவர்!

நீ

மிதிப்பவரை

மிதி!

மதிப்பவரை

மதி!

நீ

வாழ்வாய்!!

நீ

பாதையாய்

இருந்து விடாதே!

காரியக்காரர்கள்

உன்னைப்

பயன்படுத்தி

தாம்

சேரவேண்டிய

இடங்களைச்

சேர்ந்திடுவர்!

நீ

பாதையாகவே

இருந்து விடுவாய்!

ஜாக்கிரதை!

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

Thursday June 28, 2007

புரிந்து செய்!!

புரிந்து செய்!!
-----------------

'காற்றுள்ள போதே

தூற்றிக் கொள்'

காலம் கடந்து

புரிந்தது!


உடன் இருந்த

நண்பரின் பெருமை

பிரிந்த பின்பே

புரிந்தது!


நன்றாய் இருந்த

உறுப்பின் அருமை

பழுதடைந்த பின்

புரிந்தது!


பயன் அளித்த

பொருளின் சிறப்பு

இழந்த பின்னர்

புரிந்தது!


உலகக் கோப்பை

வெல்லும் திறமை

தோல்விக்குப் பின்னே

புரிந்தது!


இருக்கும் போது

செய்யத் தவறியது

மரணப் படுக்கையில்

புரிந்தது!


புரியாதது

புரியும் முன்

புரிந்து கொண்டு

செய்து விடு!!

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

Thursday June 21, 2007

drimamgm@hotmail.com

இறந்தது யார்?

இறந்தது யார்?
------------------

தந்தையின் சாவு!

உறவினர்

நண்பர்கள்

அதிகாரிகள்

அக்கம்பக்கத்தவரென

கூட்டமயம்.

'பாவம்!

இப்பத்தான்

படிப்பை முடித்தான்

அதற்குள்

இப்படி ஆகிவிட்டதே?

இனி

அம்மா தம்பி தங்கையர்

கல்வி கல்யாணம் காட்சி

எல்லாமே

இவன் தலையில் தான்'

என்றது உறவின் ஒப்பாரி.

'ரொம்ப நல்ல மனிதர்!

நேர்மையானவர்

நேரம் பாராமல் உதவியவர்

இப்படி

திடீரென்று போய்விட்டாரே!'

என்றது நட்பின் குரல்.

'என்ன படித்து இருக்கிறாய்?

......சரி.........

உன் தந்தையின் வேலை

உனக்கு அளித்து விடுகிறோம்

கருணையின் அடிப்படையில்..!

என்றது அதிகார வர்க்கம்.

'அதோ!

ஒல்லியாய் உயரமாய்

போகின்றானெ

அவன் தான் மூத்தவன்!

இனி

பொறுப்பெல்லாம்

இவன் தலையில் தான்'

என்றது இறுதி ஊர்வலத்தில்

வீதியில் ஓர் குரல்.

எல்லாம் முடித்து

வீட்டுக்கு வந்தபின்

புரிந்தது

செத்தது அப்பா அல்ல!

அன்பு பாசம் அரவணைப்பு

கடமைகள் பொறுப்புகள் என

அவர் என்னில் நானாக

வாழப் போகிறார்!

உண்மையில் இறந்தது....

தந்தைக்காக நான் கண்ட

என் கனவுகளும்

உணர்வுகளும்

நானும் தான்!

.
திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

Friday October 19, 2007

ஏன் பிரிந்தோம் ?

ஏன் பிரிந்தோம் ?

எத்தனை

முழுநிலா இரவுகளில்

நாம் இருவராக

வந்த போது

நம்மைத்

தழுவித் திளைத்திருக்கிறது

கடற் காற்று!

வரவேற்றுப் பூரித்திருக்கின்றன

கடல் அலைகள்!

வந்திருந்த

அனைவரின் பாதங்களையும்

கழுவிமுத்தமிட்டு

மகிழ்ந்திருக்கிறது

கடல் நீர்!


இன்று

தனிமையில்

கண்டதாற் போலும்

எனை சுட்டுச் செல்கிறது

கடற் காற்று!

ஆர்ப்பறிக்கின்றன

கடல் அலைகள்!

நுரை நுரையாய்

காரித்துப்பிச் செல்கிறது

கடல் நீர்!


நம்மில்

யார் யாரைப் பிரிந்தோம்?

ஏன் பிரிந்தோம்?

எதற்குப் பிரிந்தோம்?

விடை நமக்கே

புலப்படாத போது

பாவம் அவைகள்!

வேறென்ன செய்யும்?

oooOooo

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

தமிழோவியத்தில்

செப்டம்பர் 20 2007

ஏனில்லை தீர்வு?

ஏனில்லை தீர்வு?
----------------------
கன்று
இறந்துவிட்டால்
தீர்வு
வைக்கோல் கன்று!

கண்
பழுதுபட்டால்
தீர்வு
மாற்றுக் கண்!

கேசம்
உதிர்ந்துவிட்டால்
தீர்வு
மாற்றுக் கேசம்!

சிறுநீரகம்
பழுதடைந்தால்
தீர்வு
மாற்றுச் சிறுநீரகம்!

பல்
உதிர்ந்துவிட்டால்
தீர்வு
செயற்கைப் பல்!

இதயம்
பழுதடைந்தால்
தீர்வு
மாற்று இதயம் போல்

வஞ்சிக்கப்பட்ட
இதயங்களுக்கு
ஏனில்லை
தீர்வு ?

oooOooo


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியத்தில்

செப்டம்பர் 27 2007

நிதானம் இழந்தால்....!

நிதானம் இழந்தால்....!
---------------------------

படிக்கும் காலத்தில்
நிதானம்
இழந்ததால்
பாதியில் முடிந்தது
கல்வி!

ஆடிய விளையாட்டில்
நிதானம்
இழந்ததால்
இழப்பில் முடிந்தது
ஆட்டம்!

போதை மயக்கத்தில்
நிதானம்
இழந்ததால்
பலனாய் கிடைத்தது
சிறைவாசம்!

இல்லற வாழ்வில்
நிதானம்
இழந்ததால்
விவாகரத்தில் முடிந்தது
இல்லறம்!

வாகனம் ஓட்டுகையில்
நிதானம்
இழந்ததால்
விபத்தில் முடிந்தது
பயணம்!

பதவியில் இருக்கையில்
நிதானம்
இழந்ததால்
பாதியில் பறிபோனது
பதவி!

பணியின் போது
நிதானம்
இழந்ததால்
பரிசாய் கிடைத்தது
பணி நீக்கம்!

விவாதத்தின் போது
நிதானம்
இழந்ததால்
கொலையில் முடிந்தது
விவாதம்!

நிதானம் தவறி
நடந்து கொண்டால்
நிச்சயம்
இழப்பே
வாழ்வில்!

நித்தம் நித்தம்
நிதானம்
கொண்டால்
நிதமும் உயர்ந்திடும்
வாழ்க்கை!!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியத்தில்

அக்டோபர் 25 2007 .

நிலை கொண்டுவிட்டது!

நிலை கொண்டுவிட்டது!
-------------------------------
எக் காலத்தில்

எச் சூழ்நிலையில்

எப் புண்ணியவானால்

எந் நோக்கத்தில்

வரையப்பட்டதோ?

இவ்வளவு

முன்னேற்றம்

கண்ட பின்னும்

நம்நாடு

இது நாள்வரையிலும்

தொலையவுமில்லை!

அழியவுமில்லை!

பூமத்திய ரேகை போல்

இதுவும்

நிலை கொண்டுவிட்டிருக்கிறது

'வருமைக் கோடு'!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பில் வெளியானது.

Saturday, November 24, 2007

சாலை மிருகங்கள்!

சாலை மிருகங்கள்!
------------------------

பயண நேரத்தில்

சாலை விதிகளை

மீறுபவர்களைக்

காணும் போதுதான்

தெரிகிறது

வாகன

ஓட்டிகளிலும்

எத்தனை

மிருகங்கள்?

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பில்

பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-10-05

லாட்டரி!

லாட்டரி!
--------------
தணியாத மோகம்!

தீராத ஆசை!

இலட்சாதிபதி

ஆகிவிட...

எவ்வளவோ

வாங்கிக்

குவித்தும்

அதிர்ஷ்டமில்லை!

அடிக்கின்றான்

லாட்டரி!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பில்

5 அக்டோபர் 2007.

லாட்டரி!

லாட்டரி!
-------------
தணியாத மோகம்!

தீராத ஆசை!

இலட்சாதிபதி

ஆகிவிட...

எவ்வளவோ

வாங்கிக்

குவித்தும்

அதிர்ஷ்டமில்லை!

அடிக்கின்றான்

லாட்டரி!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பில்

பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-10-05

வாழைத் தோல்!!

வாழைத் தோல்!!
--------------------

சாலையின் நடுவில்

வாழைத் தோல்

வீசிச் சென்றதோர்

ஆறறிவு!

வீதியில் நடந்திடும்

ஆறறிவினரில்

அதைப் பாராமல்

நடந்தனர் ஒருசாரார்!

பார்த்தும் பாராமல்

சென்றனர் மறுசாரார்!

'அம்மா'

என்ற அலறலுடன்

வழுக்கி விழுந்ததோர்

அறுபதை எட்டிய

ஆறறிவு!

விழுந்த வேகத்தில்

எலும்பின் முறிவு!

வசவைப் பொழிந்தது

வலியும் வேதனையும்!

சுற்றிலும் சூழ்ந்த

ஆறறிவினரில்

' ச்சூ ச்சூ...' என்றனர்

ஒரு சாரார்!

'பார்த்து நடக்கக் கூடாதா'?

என்றபடியே

பார்த்துச் சிரித்தனர்

ஒரு சாரார்!

முதலுதவி செய்து

சிகிச்சைக்காக

அனுப்பி வைத்தனர்

இரக்கம் கொண்ட

ஒரு சாரார்!

'ஐந்தறிவு

பழத்தைத் தின்றிருந்தால்

தோலுடனன்றோ

விழுங்கி இருக்கும்..

விபத்தையும்

அங்கே தவிர்த்திருக்கும்'

என்றெண்ணியபடியே

வாழைத்தோல்

நிகழ்வுகளை அங்கு

பரிகாசத்துடன்

பார்த்து ரசித்தது

புன்னகை பூத்தது

பூரித்துக் கிடந்தது...

ஐந்தறிவொன்று

அதை நெருங்கிய வரையில்...!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பில்

பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-11-11

புதைந்து போன இரகசியம்!

புதைந்து போன இரகசியம்!
----------------------------------

சாலையில் விபத்து!

விபத்துக்காளானவர்

பலத்த தலைக் காயம்

உடற் காயம்

எலும்பு முறிவுகளுடன்

மருத்துவ மனையில்...

தீவிர சிகிச்சைப் பிரிவில்

உணர்வற்ற நிலையில்

அசைவற்ற உடல்!

செயற்கைப் பொறிகள் மூலம்

சுவாசமும்

இதய இயக்கமும்!

வெளியில்

கவலையில் தோய்ந்து

வாடிய நிலையில்

உறவுகள்!

மனைவி

தன் தாலிக்காகவும்

குழந்தைகள் தந்தைக்காகவும்

உடன்பிறப்புகள் சகோதரனுக்காகவும்

தாய் தனயனுக்காகவும்

இறைவனிடம்

வேண்டுதல்கள்

பிரார்த்தனைகள்

விடுத்த வண்ணம்!

முன்னேற்றமிருக்கிறதா?

கேட்கும் போதெல்லாம்

'அடுத்த 48 மணிநேரம்

எதுவும் சொல்வதற்கில்லை'

என்றே மருத்துவரின் பதில்!

அவ்வப் போது

சிகிச்சைக்காக எனக்கூறி

மனைவியிடம்

கையொப்பம் பெற்றுக் கொண்டது

மருத்துவமனை நிர்வாகம்!

இப்படியே

வாரங்களிரண்டு ஓடிட

'மூளை இறப்பின்

காரணமாய்

மரணம்'

என்ற அறிவிப்புடன்

சிகிச்சைக் கட்டணம்

சில இலட்சங்கள் கேட்டு

மருத்துவ மனையின்

நிர்ப்பந்தம்!

நிர்வாகம் கொடுத்த தொகை

நண்பர்கள் உறவினர்கள்

தந்த தொகை

நகை நட்டுகள் விற்று

வந்த தொகை

இவை போதாமல்

கடனாய் உடனாய்

பெற்ற தொகையென

அனைத்தையும்

மொத்தமாய் செலுத்திவிட்டு

உடலையும் கடனையும்

சுமந்து சென்றது

சுற்றம்!

இதயம்

ஈரல்

சிறுநீரகமென

இறக்கும் முன்பே

உறுப்புகளைக்

களவாடியவர்கள்

பாகம் பிரித்துக் கொண்டனர்

மருத்துவ மனையில்

வெள்ளை உடுப்பில்

சேவையின் பெயரில்

சமுதாயத்தின்

ஒட்டுண்ணி

சாருண்ணிகள்!

உண்மை

உணராமலேயே

(வெளிவராமலேயே)

உடலை இடுகாட்டுக்குத்

தூக்கிச் சென்றனர்

உறவுகள்!

புதைக்கப் பட்டது

உடல்!

புதைந்து போனது

உறுப்புகள் களவு போன

இரகசியம்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

drimamgm@hotmail.com

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

22 நவம்பர் 2007.

புதைந்து போன இரகசியம்!

புதைந்து போன இரகசியம்!
-----------------------------------

சாலையில் விபத்து!

விபத்துக்காளானவர்

பலத்த தலைக் காயம்

உடற் காயம்

எலும்பு முறிவுகளுடன்

மருத்துவ மனையில்...

தீவிர சிகிச்சைப் பிரிவில்

உணர்வற்ற நிலையில்

அசைவற்ற உடல்!

செயற்கைப் பொறிகள் மூலம்

சுவாசமும்

இதய இயக்கமும்!

வெளியில்

கவலையில் தோய்ந்து

வாடிய நிலையில்

உறவுகள்!

மனைவி

தன் தாலிக்காகவும்

குழந்தைகள் தந்தைக்காகவும்

உடன்பிறப்புகள் சகோதரனுக்காகவும்

தாய் தனயனுக்காகவும்

இறைவனிடம்

வேண்டுதல்கள்

பிரார்த்தனைகள்

விடுத்த வண்ணம்!

முன்னேற்றமிருக்கிறதா?

கேட்கும் போதெல்லாம்

' அடுத்த 48 மணிநேரம்

எதுவும் சொல்வதற்கில்லை'

என்றே மருத்துவரின் பதில்!

அவ்வப் போது

சிகிச்சைக்காக எனக்கூறி

மனைவியிடம்

கையொப்பம் பெற்றுக் கொண்டது

மருத்துவமனை நிர்வாகம்!

இப்படியே

வாரங்களிரண்டு ஓடிட

'மூளை இறப்பின்

காரணமாய்

மரணம்'

என்ற அறிவிப்புடன்

சிகிச்சைக் கட்டணம்

சில இலட்சங்கள் கேட்டு

மருத்துவ மனையின்

நிர்ப்பந்தம்!

நிர்வாகம் கொடுத்த தொகை

நண்பர்கள் உறவினர்கள்

தந்த தொகை

நகை நட்டுகள் விற்று

வந்த தொகை

இவை போதாமல்

கடனாய் உடனாய்

பெற்ற தொகையென

அனைத்தையும்

மொத்தமாய் செலுத்திவிட்டு

உடலையும் கடனையும்

சுமந்து சென்றது

சுற்றம்!

இதயம்

ஈரல்

சிறுநீரகமென

இறக்கும் முன்பே

உறுப்புகளைக்

களவாடியவர்கள்

பாகம் பிரித்துக் கொண்டனர்

மருத்துவ மனையில்

வெள்ளை உடுப்பில்

சேவையின் பெயரில்

சமுதாயத்தின்

ஒட்டுண்ணி

சாருண்ணிகள்!

உண்மை

உணராமலேயே

(வெளிவராமலேயே)

உடலை இடுகாட்டுக்குத்

தூக்கிச் சென்றனர்

உறவுகள்!

புதைக்கப் பட்டது

உடல்!

புதைந்து போனது

உறுப்புகள் களவு போன

இரகசியம்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

drimamgm@hotmail.com

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

22 நவம்பர் 2007.

இறுதி மரியாதை!

இறுதி மரியாதை!
----------------------

வெயிலிலும்

குளிரிலும்

மழையிலும்

புயலிலும்

துவளாது

தளராது

மாடாய் உழைத்து

ஓடாய்த் தேய்ந்தவர்!

இறக்கும் வரையிலும்

எவரையும் சாராமல்

சுயமாய்

உழைத்துச் சம்பாதித்த

சுயமரிதையாளர்!

இன்று

இறந்ததும்

குளிர் பதனப்

பேழையில்

கிடத்தி இருக்கின்றனர்

சிறகுகள் முளைத்ததும்

பொறுப்புகளைத் தவிர்த்து

பறந்து சென்று விட்ட

மக்கள்!

இறுதி மரியாதையாம்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

drimamgm@hotmail.com

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

22 நவம்பர் 2007

Wednesday, November 7, 2007

இறந்தும் வாழ்வர்!!

வெற்றிக்களிப்பில்
இலங்கை இராணுவம்!
வீழ்ந்து விட்டனராம்
தமிழீழ வீரர்கள்!
சு.ப.தமிழ்ச் செல்வன்
உட்பட அறுவரைக்
கொன்று விட்ட
இறுமாப்பு!

விடுதலைப் போர்
துவங்கிய காலம் முதல்
இன்று வரையிலும்
எத்தனை ஆயிரம்
தமிழர்கள் மாய்ந்தார்கள்!
ஓய்ந்துவிட்டதா?
விடுதலைப் போர்!

தமிழீழம்!
காலத்தின் கட்டாயம்!
தமிழ்ப் போராளிகளை
இலங்கை அரசு
இன்று கொல்லலாம்
தெய்வம்
நின்று கொல்லும் நாள்
வெகுதொலைவில் இல்லை!

தமிழ்ச் செல்வன்
புதைக்கப் ப்டவில்லை!
விதைக்கப் பட்டிருக்கிறார்.
ஒர் தமிழ்ச் செல்வனைக்
கொன்று ஓராயிரம்
தமிழ்ச் செல்வர்களுக்கு
வித்திட்டிருக்கிறது!
சமாதானத்துக்குச்
சாவுமணிஅடித்திருக்கிறது
இலங்கை அரசு!

தமிழீழம்
வீரர்களைப் பிரசவிக்கின்றது!
அவர்களைத்
தீவிரவாதிகளாக்குகிறது
இலங்கை அரசு!
எவரெவர் எதையெதை
விதைக்கின்றார்களோ
அதையதையே
அறுவடை செய்வர்!

சிங்களவர்கள்
தமிழர்களுக் கெதிராய்
அநீதியும் அக்கிரமங்களும்
விதைத்திருக்கின்றனர்!
அவர்கள்
என்னபெறுவார்கள்?
காலம் பதில் சொல்லும்!
அநீதி அழியும்!
அறம் வெல்லும்!
நீதி நிலைக்கும் நீடிக்கும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Sunday, October 28, 2007

இரத்த பாசம்!

வசந்த கால மாலை
சாய்வு நாற்காலியில்-நான்
தென்றலின் தழுவலில்
மெய்மறந்த நிலையில்!

எங்கிருந்தோ
பறந்து வந்த கொசு
உரிமையோடு
என்மீது அமர்ந்து
உரிந்துக் குடித்தது
என் குருதி!

கடித்த இடத்தில்
அரிப்பு எரிச்சல்!
கௌவிப் பிடித்தேன்
கொசு என்கையில்!

கொல்ல நினைத்து
கசக்கும் வேளையில்
உள்மனம் சொன்னது
'பாவம் விட்டு விடு
அதன் உடலில்
உன் ரத்தம்' !

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Thursday, June 28, 2007

வாழும் தமிழ்!!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்! இந்திய மாநிலங்களில் இரண்டின் அதிகாரப் பூர்வ ஆட்சிமொழி!
இந்திய எல்லையைத் தாண்டி, கடல் கடந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள் எனப் பல்வேறு நாடுகளிலும் அந்நாடுகளின் தேசிய மொழியாய் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இந்திய மொழி! காலமாற்றங்கள், சமய மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள் என ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எத்தனையோ மாற்றங்கள் வந்தபோதும், காலச் சூழலுக்கேற்ப ஈடுகொடுத்து இன்றைக்கும் உலகம் முழுக்க பத்துக் கோடிக்கும் மிகையானவர் -களால் உச்சரிக்கப்பட்டு பன்னாட்டு மொழியாய் நீடூழி, நிலைத்து உலாவந்து கொண்டிருக்கும் உன்னத மொழி 'தமிழ்' என எத்தனையெத்தனை அடைமொழி கொடுத்தாலும் குறைவே!
இத்தகைய சிறப்புகளைப் பெற்ற சிறந்த மொழிக்குச் சொந்தக்காரகள் நாம் என எண்ணும் போது மகாகவி பாரதியின் " செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!" என்னும் பாடலின் வரிகள் நம் செவிகளில் ரீங்காரமிடுவதை நம்மால் உணராமல் இருக்க முடியாது.
உலகத்திலேயே மிகையாய்த் தமிழர்கள் வாழும் தமிழகத்தின் ஆரம்பக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியில் கல்வி போதித்திடல் வேண்டும் எனத் தமிழக அரசு சட்டம் இயற்றியதை எதிர்த்துத் தமிழர்களே நீதிமன்றம் சென்று தடை வாங்கி வழக்கு நிலுவையிலிருக்கும் அதிசயம் உலகின் வேறெந்த நாட்டிலும் நம்மால் காணமுடியாது.
தமிழகத்தில் பிறந்து, தமிழகத்திலேயே வளர்ந்து, படித்து ஆளாகிவிட்ட நிலையில் ஆங்கிலம் பேசுவதே உயர்வு, ஆங்கிலம் பேசுவதே நாகரிகம் என்னும் தாழ்வு மனப் -பான்மை மனநோயால் பீடிக்கப்பட்டுத் தங்களின் சுயம் இழக்கும் நிலையில் கோடிக் -கணக்கான தமிழர்கள் இன்றைக்கும் பெரும்பான்மையாய் இருப்பதைக் கண்டு நம் இதயம் விம்முகிறது, விழிகள் அருவிகளாகின்றன, வேதனை நம்மை வாட்டுகின்றது.
அகிலமே வியக்கும் வண்ணம் இன்றையக் கணினியுகத்தில் நம்நாடு அறிவியல் முன் -னேற்றம் கண்டு சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் தாய்மொழி தமிழை மறக்காமல் தமிழில் பல்வேறு எழுத்துருக்களையும், மென்பொருட்களையும் உருவாக்கி காலச் சூழலுக்கொப்ப தமிழை உயர்த்தி சேவை செய்து வரும் தமிழர்கள் எட்டுத்திக்கிலும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது பெருமையால் நம் உள்ளம் பூரிக்கின்றது, புளகாங்கிதம் கொள்கின்றது.
திரவியம் தேடி திசையெட்டுச் சென்றிட்டாலும், தாயகத்தையும் தாய்மொழியையும் மறவாது தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்யும் தமிழ்வேட்கை மிக்கவர்கள் எத்திசையிலிருந்தாலும், அவர்களைப் போற்றிட, வாழ்த்திட உள்ளம் துடிக்கின்றது, மெய் சிலிர்க்கின்றது, பேருவகை பூரித்தெழுகின்றது. இனிய தமிழ் இனி வையம் உள்ள மட்டும் இனிதே வாழும் என்னும் நம்பிக்கை ஒளிர்கின்றது.

அன்புடன், இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.