Sunday, November 25, 2007

வரதட்சணை!!

மணச் சந்தை -
மானம் ஈனம்
சூடு சுரணை
சுயமரியாதை
ஆண்மை
எல்லாமெ விற்பனைக்கு!

படிப்பு பட்டம்
பணி பாரம்பரியம்
தகுதி தராதரத்துக் கேற்ப
விலைகளும்
பேரங்களும்!

மனசாட்சியைத்
தொலைத்து விட்டுக்
கை யெழுத்தாகிறது
மண ஒப்பந்தம்!
சாட்சியாய்
சொந்தங்கள் பந்தங்கள்!

கந்துவட்டிக்காரர்களாய்
உருவெடுக்கிறார்கள்
பிள்ளை வீட்டார்!
கொத்தடிமை ஆக்கப்படுகிறாள்
மணப் பெண்!

பெண்ணைப்
பெற்ற கடன் ....
கேட்கும் போதெல்லாம்
கொடுக்கும்
நிர்ப்பந்தத்தில்
பெண் வீட்டார்!

பிள்ளையைப்
பெற்ற கடனும்....
வளர்த்த செலவும்
வசூலிக்கும் நிலையில்
பிள்ளை வீட்டார்!

பொன் முட்டையிடும்
வாத்தாய்
இருத்தல் வேண்டும்
மணப் பெண்!
அன்றேல்
விளக்கேற்ற வந்தவளின்
வாழ்க்கை விளக்கு...?

மண்ணிலே
பிறந்த பெண்ணுக்கு
மண்ணெண்ணெய்
செந் தீயால்
அபிஷேகம்!

பெண்ணினத்துக்கு
இழைக்கப்படும்
கொடுமைகள் அநீதிகள்!
பெண்களே காரணமாய்
இருக்கும் நிலைமைகள்
அவலங்கள்!

மனிதம் செத்துவிட்ட
சமுதாயத்தில்
மானங் கெட்டவர்களின்
பெருக்கம்!

பணத்துக்காக
விலை போகும்
பெண்ணை
சமூகம்
அழைக்கும் பெயர்..
வேசி!

வரதட்சணையின் பெயரில்
பணத்துக்கும் பொருளுக்கும்
விலை போகும்
ஆண்களையும்
அவர்களுக்கு உடந்தையாய்
இருப்போரையும்
என்னென்று அழைப்பது...?

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மே 10 2007

No comments: