'எய்ட்ஸ்'
கேட்டு கையேந்தியது
ஒரு காலம்!
இன்றோ
'எய்ட்ஸ்'
கேட்டு ஓடிடுவர்
பல காதம்!
வேண்டாத சேர்க்கை
நல்லொழுக்கமின்மை
இதுவே இதற்கு
மூலக் காரணம்!
நினைவில் கொள்!
இல்லையிது
சாதாரணம்.
நோய்கள்
பலவுண்டு
இவ்வையம் தனில்!
பார்ப்பவர்
வருந்துவர்
பரிதாபப்படுவர்
பச்சாதாபம் கொள்வர்!
'எய்ட்ஸ்' நோயாளியைக்
காண்பவரோ
அச்சம் கொள்வர்
இழித்துரைப்பர்
பாராமுகம் கொள்வர்!
இது
சமூகத்துக்கோ
பெரும் கேடு!
குடும்பத்துக்கோ
ஆறா வடு!
தமிழில்
'உருக்கு நோய்'
என்று இதற்குப்
பெயர்!
உருக்கிவிடும்!
உருக்குலைத்துவிடும்
உடலை
உயிரை
உள்ளத்தை
செல்வத்தை
நம்பிக்கையை
நற்பெயரை.
இதன்
தோற்றம்
அவமானச் சின்னம்!
முடிவு
நினைவுச் சின்னம்!
தடையின்றி
நடக்கிறது
விபச்சாரம்!
'ஆணுறை அணிந்திடுக'
அரசின் பிரச்சாரம்!
ஏழ்மை
சமுதாயத்தின்
தாழ்வு!
'எய்ட்ஸ்'
சமுதாயத்தின்
அழிவு!
இழிவு!!
சபலம் விடுத்து
நல்லொழுக்கம் கொண்டு
அறிவுப் பூர்வமாய்
அணுகினாலன்றி
'எய்ட்ஸை'
ஒழிக்க இயலாது!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
முத்துக்கமலம்.
15-5-2007.
Monday, November 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment