Sunday, November 25, 2007

உறுதிகொள் தமிழா!!

மனிதன் ரசிக்கும்
கருங்குயில் பாட்டு
குயிலின் மொழிதானே?

பச்சைக் கிளியும் தன்
இனத்துடன் பேசிடும்
கிளியின் மொழிதானே?

காக்கை கரைந்து
கூட்டம் சேர்த்திடும் தன்
காக்கை மொழியில் தானே?

பறவைகள் மிருகங்கள்
உறவாடிடும் மொழியும்
அதனதன் தாய்மொழி சரிதானே?

மாற்றார் மொழியில்
பயிலுதல் பேசுதல்
தவறில்லை; சொல்கின்றாய்!

தாய்மொழி தமிழில்
பயின்றிட பேசிட
கூச்சமேன் கொள்கின்றாய்?

விஞ்ஞானம் கணிதம்
எல்லாமே உண்டு
அம்மொழியில் என்கின்றாய்!

உன்மொழியில் இருக்கும்
விஞ்ஞானம் கணிதம்
பயில ஏன் மறுக்கின்றாய்?

நீ வளர்ந்த மொழியை
நீ வளர்க்க மறுத்தல்
நியாயமோ? சொல் தமிழா!

நாமும் வளர்ந்து-நம்
மொழியும் வளர்த்திட
உறுதிகொள் நற்றமிழா!!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மார்ச் 01 2007

No comments: