நாயே! நாயே! நாயே! என்று
நா கூசாமல் ஏசுகின்றீர்!
நன்றி மிக்க எங்களை ஏசி
நன்றியை மறக்கின்றீர்!
மனைவியை மக்களை மற்றவரை ஏச
எங்களைக் குறிக்கின்றீர்!
அவர்கள் நல்லது செய்து பாராட்டும்
வேளையில் எங்களை ஏன் மறக்கின்றீர்?
நீங்கள் கொடுப்பதைத் தின்று
காவல் காத்தும் எங்களைத் திட்டுகின்றீர்!
நாங்கள் இல்லாத வீட்டில் களவு போனால்
எங்களை நினைக்கின்றீர்!
திருட்டுக்களையும், தவறுகளையும்,
கூசாமல் செய்கின்றீர்!
எங்களின் உதவியால் பிடிபட்டு விட்டால்
'நாய்' காட்டிக் கொடுத்து விட்டதென்கின்றீர்!
பிடிபட்ட திருடரை திட்டுவதென்றால்
'திருட்டு நாயே' என்கின்றீர்!
உங்களில் எவரும் நன்றி மறந்தால்
'நன்றி கெட்ட நாய்' என்கின்றீர்!
நன்றியுள்ள பிராணி நாங்கள்
என்பதை உணரவும் செய்கின்றீர்!
நாங்கள் செய்திடும் கடமையைப் பல
சமயங்களில் பாராட்டவும் செய்கின்றீர்!
உங்களுக்குள்ளிருக்கும் உயர்ஜாதி தாழ்ஜாதியாய்
எங்களையும் பிரித்து விட்டீர்!
உங்களுக்குள்ளிருக்கும் உயர்நிலை தாழ்நிலை
எங்களுக்கு மளித்து விட்டீர்!
உங்களுக்குள்ளிருக்கும் ஜாதி மதக்
கலவரம் எங்களுக்குளில்லை ஐயா!
எங்களுக்குள்ளிருக்கும் நன்றி மறவாமை
உங்களுக்கேனில்லை ஐயா?
நாங்கள் குரைத்தாலும், கடித்தாலும் பிறரை
எப்போதும் கொலை செய்வதில்லை ஐயா!
நீங்களும் திருந்தி பிறருயிர் காத்திட
முன்வர வேண்டுமையா!
-இமாம். கவுஸ் மொய்தீன்.
முத்துக்கமலம்.
30-4-2007
Monday, November 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment