Tuesday, September 30, 2008

கனிம நீர்!


குடிக்க குளிக்க
சமைக்க சலவைக்காக
கழுவ சுத்தமாயிருக்க
இறைவன் அளித்த கொடை
நீர்!

ஆறாய் வரும் வழியில்
கழிவுகளையும் இரசாயனங்களையும்
கலக்கச் செய்கின்றார்
மனிதர்களில்
ஓர் சாரார்!

விவசாயத்துக்கும்
மனிதத் தேவைகட்காகவும்
பயன்படுத்திக்
கொள்கின்றார்
ஓர் சாரார்!

புட்டியில் அடைத்து
'கனிம நீர்'
எனும் பெயரில்
காசுக்கு விற்கின்றார்
ஓர் சாரார்!

அதில் அடைந்து கிடக்கும்
நுண்கிருமிகள் எத்தனை?
அறியாமலேயே வாங்கி
பருகிக் கொண்டிருக்கின்றார்
ஓர் சாரார்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Last update : 23-09-2008 22:49

நன்றி: அதிகாலை.

இறைவனின் நினைப்பு!

செவிடர் குருடர் ஊமையர்
மூளை வளர்ச்சி குன்றியோர்
பக்கவாதம் கீழ்வாதம் முகவாதம்
இளம்பிள்ளை வாதம்
விபத்திலோ சர்க்கரையினாலோ
கைகால்கள் துண்டிக்கப்பட்டோர்
தொழுநோயாளர் போன்ற
ஊனமுற்றோரைச் சந்திக்க நேர்கையில்
மனம் வெதும்பார்
உள்ளம் உருகார்
வேதனை படார் தான் யார்?

இப்படியும் படைத்திருக்கின்றானே!
இதுவென்ன?
அச்சுறுத்தலா? தண்டனையா?
சமுதாயத்துக்கோர் பாடமா? உதாரணமா?
கல்மனம் கொண்டவனா?
மனமே இல்லாதவனா?
இவன் இறைவன் தானா? என
நொந்துபோய்ப் பேசுவதும்
படைத்தவனை நோதலும்
நியாயம் தான்! -ஆயினும்

ஊனமின்றி இருக்கும் நம்மில்
எத்தனை பேர்
இதனை உணர்கின்றார்?
இறைவனை நினைக்கின்றார்?
நன்றி செலுத்துகின்றார்?
வலியிலும் இன்னலிலும் மட்டுமே
இறைவனை நினைப்பவரன்றோ? நாம்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

on 23-09-2008 21:59

நன்றி: அதிகாலை.

நாளை எவரோ?

சவ ஊர்வலம்!
கூத்தும் மேளமும்
முழங்கியபடி
முன்னே செல்லும் சிலர்...

காசுக்காகவோ
கடமைக்காகவோ
பிணத்தைச் சும‌ந்தபடி
பின் செல்லும் சிலர்...

சோகத்தில் துயரத்தில்
தோய்ந்த முகத்துடனும்
பிரிவின் வேதனையுடனும்
பின் தொடரும் சிலர்...

வீதியோரத்தில்
நின்று கொண்டு
வேடிக்கை
பார்த்தபடி சிலர்...

பிணம் மட்டும்
அமைதியாய் உரைக்காமல்
உணர்த்திக் கொண்டிருந்தது
''இன்று நான்
நாளை எவரோ?

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Last update : 11-09-2008 01:26

நன்றி: அதிகாலை.

ஹை கூ !!



தெரிந்த கேள்வி
தெரியாத விடை
இறைவன்!

மேடையில் சாதியொழிப்பு
வீட்டுக் கூடத்தில்
சாதிக்கூட்டம்!

சுட்டப் பழமா? சுடாத பழமா?
சுடும் பழம் தான்!
விலைவாசி!

இருளில் கலவரம்
பகலில் சமாதானப் புறா!
அரசியல்வாதி.

சாலையோரக் கடவுள்
சம்பாதித்துக் கொடுக்கிறது
சில்லறைக்காசு!

ஐந்தறிவை ஏமாற்றும்
ஆறறிவு
வைக்கோல் கன்று !

முகவர்கள் மோசடி
வேலை தேடி அலைகிறது
வெளிநாட்டு மோகம் !

முள்ளும் புதரும்
பஞ்சுமெத்தை தான்
கௌதாரிக் கூடு !

கட்டியது மாளிகை
கண்டது குடிசை
கட்டிடத் தொழிலாளி !

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

செப் 18 2008 .

நன்றி: தமிழோவியம்.

இமாம் குறுங்கவிதைகள்!!


சாதிமதப் பிரிவுகள்
சரியான புத்திமதி
பூகம்பம்!

எவரின் கண் பட்டதோ
உடைந்து சிதறியது
திருஷ்டிப் பூசனி!

பன்றிகள் உலவும் வீதி!
பறையருக்குத் தடை!
மனுதர்மம்.

காவிரியிலா நீரில்லை?
கரை புரள்கிறது
கானல் நீர்.

இன்று இவர்!
நாளை எவரோ?
மந்திரி வாழ்வு!

கொள்ளை போனாலும்
தளர்வதில்லை
தேனீக்கள்!

ஆடை கட்டிய ஆபாசம்
நிர்வாணக் கடைவிரிப்பு
மஞ்சள் பத்திரிகை.

பழகியதில் புரிந்தது
மனித வடிவில்
பச்சோந்தி!

இன்றும் தெரியாத விடை
முதலில் போட்டது யார்?
ஒற்றையடிப்பாதை!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

16-9-2008.

நன்றி: முத்துக்கமலம்.

ஹைகூ!!


மண்ணில் பிறப்பு!
மண்ணுக்கே இரை!
மனிதன்

படைத்தவனையே
படைக்கும் மனிதர்
சிலையாய் கடவுள்!

கணுக்காலில் காயம்!
கண்ணில் நீர்!
உடன்பிறந்த பாசம்

பயிர்நிலம் ஆக்கிரமிப்பு!
பெயருக்குத் தானோ
வேலிக்காத்தான்!

நடிகரின் மரணம்!
திரையுலகமே கண்ணீர் வடித்தது
கிளிசரின்!

Last update: 02-09-2008 05:05

நன்றி:அதிகாலை.

Sunday, August 31, 2008

எதுவும் சாத்தியமே!


பறப்பன நடப்பன
ஊர்வன தவழ்வன என
அனைத்து உயிரினங்கட்கும்
சொந்தமாய் இல்லங்களாம்
மரங்கள் கூடுகள் புதர்கள்
புற்றுகள் குகைகள்...!

மனிதர்கட்கும் அவரவர்
வளம் வசதிகட்கேற்ப
சொந்த வீடுகள்
வாடகை வீடுகள்
குடிசைகள் சாலையோரங்கள்
இல்லங்களாய்...!

வாழ்நாளில்
சொந்தமாய் ஓர் வீடு
பெரும்பாலோரின் கனவு!
ஒரே நாளில்
ஊரையே அழித்துத்
தரைமட்டமாக்குதல்
சிலரின் நனவு!

உலகே வியக்கும்
வேடிக்கை பார்க்கும்
மனசாட்சியையும்
மனிதநேயத்தையும்
புதைத்துவிட்டவர்களின்
அரசியலை......

- இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி:அதிகாலை.

23-08-2008 17:21

சுதந்திரமே உன்னால்...!


சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி யென
வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

சொத்துப் பங்கீடு!!


தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!

அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!

மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!

அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!

மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!

சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!

கடைசி மகனாய்
நான்....

என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

நன்றி:முத்துக்கமலம்.

1-8-2008.

Wednesday, July 30, 2008

'சைக்கோ' !!


நாள்தோறும் விடிந்தும்

விடியாமலேயே இருக்கின்றது

காலைப் பொழுது!


ஊடகங்களைத் திறக்க

பதைபதைக்கிறது

மனம்!


'சைக்கோ'வின் அடுத்த பலி

உறக்கத்திலிருக்கும்

அப்பாவி எவருமா?


'சைக்கோ' என நினைத்ததால்

கொல்லப்பட்டிருக்கும்

அப்பாவி எவருமா?


'சைக்கோ'வின் பெயரால்

கைதாகி இருக்கும்

அப்பாவி எவருமா?


கைதானவரும் கொல்லப்பட்டவரும்

'சைக்கோ'வாய் இருக்கும் பட்சத்தில்

தொடரும் கொடூரக் கொலைகளுக்குக்

காரணம் யார்? யார்? யார்?


பொதுமக்களுக்கு வேண்டுமாயின்

புதிராய் பீதியாய் இருக்கலாம்

'சைக்கோ'!


ஸ்காட்லாண்ட் யார்டுக்கு

இணையானதாகக் கருதப்படும்

தமிழகக் காவல்துறைக்குமா...?


தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூலை 31 2008

கோடிகள் கொடுத்தாலும்...!!


அம்மா......!

ஊரில் இருக்கின்றார்!

கேட்போர்க்கெல்லாம்

பதிலாய் இருந்த

நிகழ் காலம்...

அவரின் மரணத்தால்

இறந்த காலமானது!



அவருக்குச் செய்த

பணிவிடைகள்

கடுகாய்ச் சுறுங்கிவிட

தவறியவை

மலை போல்

மனக்கண் முன்...!



தன் உதிரத்தை

உணவாய்

உணர்வாய்

ஊட்டியது...



தாலாட்டு பாடி

தொட்டிலாட்டி

உறங்க வைத்தது...



நிலாவை

நட்சத்திரங்களை

மின்மினிகளைக் காட்டி

சோறூட்டியது...



உடல் நலமில்லாத

நேரங்களில்

உண்ணாமல் உறங்காமல்

சேவை செய்தது...



விரல் பிடித்து

நடை எழுத்து

சித்திரம்

பழக்கியது...



மழலையைக் கேட்டுப்

பூரித்தது

புன்முறுவல் பூத்தது

பெருமை கொண்டது...



குழந்தைகட்கு

வலியேதுமென்றால்

துடித்தது துவண்டது

துயரம் கொண்டது...



ஒவ் வொன்றும்

தொடர் காட்சியாய்

நெஞ்சை

வருட...



உடன்

வைத்திருந்துப்

பணிவிடை செய்துப்

பார்த்திருந் திருக்கலாமே...!



விம்மியது இதயம்

அருவிகளாயின விழிகள்

கசக்கிப் பிழிந்தது

குற்ற மனப்பான்மை!



விலகி இருந்ததாலும்

பிரிந்து விட்டதாலும்

இழந்த சுகம்

கோடிகள் கொடுத்தாலும்

திரும்புமோ?



தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூலை 17 2008.

முத்துக்கமலத்தில் - 15.7.2008.

காந்தி பிறந்த நாடு !!


மீண்டும் மீண்டும்

தொடந்து கொண்டுதானிருக்கின்றன

நச்சுச் சாராய சாவுகள்!


மீண்டும் மீண்டும்

தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது

விதவை அநாதைகளின் பெருக்கம்!



மீண்டும் மீண்டும்

தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது

உறவு நட்புகளின் ஒப்பாரி!



நின்று கொல்லும் நஞ்சு- மது!

நிறுத்தாமல் குடித்தாதால்

இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!



கொலைகள் கொள்ளைகள்

விலையேற்றம் பணவீக்கமென

அனைத்தும் வளர்பிறையாய்....!



அனைத்துத் துறைகளிலுமே

வேகமாய் முன்னேறி வருகிறது

நம் நாடு!



சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்

முழுகவனத்துடன்....

காவல்துறை!



சூடான பரபரப்பான

செய்திகளின் தேடலில்....

ஊடகங்கள்!



கேள்வி கண்டனக் கணைகளை

வீசுவதில்... சலிப்படையாத

எதிர்க்கட்சிகள்!



ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்

கோலொச்சிக் கொண்டிருக்கிறது

நம் அரசு!



காந்தி பிறந்த நாட்டில்

நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

பெருமையுடன்....


தமிழோவியத்தில்- இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூன் 26 2008

சாதனை!!


படிப்பில் பந்தயத்தில்

வீரத்தில் விவேகத்தில்

திறமையில் உயர்வில்

விஞ்சியிருப்பதும் முந்தியிருப்பதும்

சாதனை!


படைத்திட்ட சாதனைகளை

விஞ்சுவதும் மிஞ்சுவதும்

தனித்தன்மையுடன்

ஒளிர்வதும்

சாதனை!


உண்மை உழைப்பு

கடமை கண்ணியம்

கட்டுப்பாடு புத்திசாலித்தனத்தால்

சாதிப்பதே

சாதனை!


மனித உயிரின்

வாழ்வுக்கும் உயர்வுக்கும்

ஆக்கத்துக்கும் இன்றியமையாதவற்றை

கண்டுபிடித்தல்

சாதனை!


விண்கோள்கள் ஏவுகணைகள்

விண்வெளி ஆராய்ச்சி

கணினிகள் தகவல்தொழில்நுட்பம்

மாற்றுறுப்புப் பொருத்தங்கள் எல்லாமே

சாதனைகள்!


உயிர்காக்கும் மருந்துகள்

நோயறியும் பொறிகள்

வானொலி தொலைக்காட்சி

தொலைப்பேசி செல்பேசிகள் எல்லாமே

சாதனைகள்!


விண்ணில் மண்ணில்

நீரில் பயணம் செய்ய

விதவிதமான அதிவெக

வாகனங்கள் எல்லாமே

சாதனைகள்!


விவசாயத்தில் பசுமைப்புரட்சி

உற்பத்தியில் தன்னிறைவு

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்

விமானங்களில் பறந்து கொண்டிருக்கும்

நம் பட்டதாரிகள் எல்லாமே

சாதனைகள்!


மகாத்மா முதற்கொண்டு

சாதனையாளர்களையும் சாதனைகளையும்

பட்டியலிட்டால் எண்ணிமாளாதவையாய்

எத்தனை யெத்தனையோ

சாதனைகள்!


புகை போதை விபச்சாரம்

சமூகவிரோதம் ஏழ்மையில்லா

சமுதாயம் காணும் இனியநாளே

இந்தியாவின் மகத்தான உன்னதமான

சாதனையாகும்!!

நன்றி:தமிழோவியம்.

ஜூன் 19 2008

Thursday, June 19, 2008

ஒப்பாரும் மிக்காரும்...?


பொது விடங்களில்
துப்புவதிலும்
நான்கு பேர்
கூடியிருக்குமிடத்தில்
மூக்கையும் சளியையும் சிந்தி
அசுத்தப் படுத்துவதிலும்
உண்ட வாழையின்
தோலை வீதியில்
வீசி எறிவதிலும்
பொதுவிடங்களில்
சுவர்களைத் தேடி
சிறுநீர் அபிஷேகம்
செய்வதிலும்
எச்சத்தையும் மிச்சத்தையும்
கண்ட இடங்களில்
போடுவதிலும் நம்மை
ஒப்பாரோ மிக்காரோ தான்... எவர்?
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-16

காற்று!



வசந்தம் வாடை
அனல் புயல்
சூறாவளி புழுதிக்காற்றெனப்
பருவத்துக்குப் பருவம்
பற்பல அவதாரங்களில்...
பிராணவாயு
கரியமிலவாயுவென
உயிரினங்களுக்கும்
தாவரங்களுக்குமிடையே
சுவாசப் பரிமாற்றத்தில்...
காடுகளின் அழிப்பு

இரசாயனங்களின்
வெளியேற்றம்
தூசு மாசுகளின்
ஆதிக்கத்தால் இன்று
நச்சு பரப்பும் நிலையில்...
காற்றின்
கனிவும் சீற்றமும்
பாகுபாடு பார்ப்பதில்லை
கனிவுடன் இருக்கும் வரைதான்
கண்ணியத்துடன் இருக்கும்...
உணர்ந்துகொள் மனிதா...!
இதன் இதமும்
இனிமையும் இன்பமும்
இலக்கியங்கள் கதைத்திடும்!
சினமும் சீற்றமும் கடுமையும்
வரலாறு உரைத்திடும்!
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-15.
தமிழோவியம் - ஜூன் 05 2008

Tuesday, June 17, 2008

நீரின்றி உயிரில்லை!


பூமிப்பந்தின் பரப்பில்
மூன்றில் இருபங்கு நீர்!

உயிருக்கும் உடலுக்கும்
இன்றியமையாத் தேவை நீர்!

உணவு பானங்கள் பழங்கள்
அனைத்திலுமே நீர்!

ஊற்று அருவி ஆறு மேகம் உப்புகளின்
தோற்றமும் தோன்றலும் நீர்!

சுவைக்க சுத்தம் சுகாதாரமாயிருக்க
அழுக்கைப் போக்க நீர்!

மனித இனத்தின் மகிழ்ச்சியிலும்
துக்கத்திலும் நீர்!

சூடாக்கினாலும் குளிர்வித்தாலும்
தணிந்திருந்தாலும் நீரே நீர்!

நீரின்றி ஏது இயக்கம்?
நீரின்றி உயிரில்லை!

நீரின்றி உலகுமில்லை!
எங்கும் எதிலும் நீர் நீர் நீர்!!

முத்துக்கமலத்தில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
2.6.2008.
தமிழோவியத்தில் -மே 29 2008

பந்துக்களில்லாப் பந்துகள்!!


விலை போகும்

வரையில் மட்டுமே
பந்துகட்கு
மதிப்பு மரியாதை
அலங்காரம்
கௌரவம் எல்லாம்!
ஒன்றைப் போலின்றி
ஒவ்வொன்றுக்கும்
விளையாட்டுகளுக் கொப்பத்
தனித்தனி
ஆர விட்ட எடை அளவைகள்
தோல் ரப்பர் பிளாஸ்டிக் எனத்
தனித்தனி தன்மைகள்!
வகை வகையாய்
விளையாட்டுக்கள்
அவற்றின் ஆளுமையில்
திறமை தந்திரம் உக்தி
பலம் கொண்ட வீரர்களுக்கு
வெற்றிச் சான்றிதழ்கள்
கோப்பைகள் பரிசுகள்
பணமுடிப்புகள் பாராட்டுக்கள்!
ஊடக ஒளிபரப்பும்
நேரடிப் பார்வையாளர்கட்கு
காட்சியாய்
இருந்ததும் மட்டுமே
அவை கண்ட
சுகம் சொர்க்கம்!
உபயோகத்தில் வந்து

அடி உதை பட்டு
கிழிந்து உருகுலைந்து
சின்னா பின்னமான

பந்துகட்குக்
கிடைத்த கௌரவம்
குப்பைமேடுகள்!
'என்ன மனிதரிவர்?
இருந்தவரையில்
பயன்படுத்திக் கொண்டு
குப்பையில் எறிதல் தான்
மனிதப் பண்போ?'
அலுத்துக் கொண்ட பந்துக்கு
குப்பை மேடு கூறியது
'ஆட்சி அதிகாரம்
அரசியல் செல்வாக்கு எனும்
விளாயாட்டுக்களில்
உம்மைக் காட்டிலும்
மிகையாய்ச் சிதைந்தவர்
மனிதரில் தான் பற்பலர்'!
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-01
கீற்றில் - 29.5.2008.

Monday, June 16, 2008

குறுங்கவிதைகள் !!











உயர் சாதிக்காரன்

தாழ்த்திக் காட்டும்

நிழல்!


சாதிக் கோடரிகள்

மோதிக் கொண்டன

இரத்தம் குடிக்கும் நரி!


உறக்கத்தில் உடல்

விழிப்பில் உள்மனம்

கனவுத் தொழிற்சாலை!


ஆட்கள் கடத்தல்

உறுப்புகள் களவாடல்

க(உ)ருப்புச் சந்தை!


புரட்சிகளை வெடிக்கும்

போர்களை முடிக்கும்

பேனா முனை!


மிருகச் சாவு கண்டனம்

மனிதச் சாவு வேடிக்கை

உலக அதிசயம்!


உள்ளங்கையில் அரிப்பு

பண வருமானம் தான்

மருத்துவருக்கு!


என்னால் நிறையும் கடல்

நதியின் திமிர்ப்பேச்சு

நகைசிந்தும் அருவி!


ஆசிரியர் வாக்கு பலித்தது

அரபு நாடுகளில்

ஆடு மேய்க்கும் தொழில்!


ஆயிரம் கனவுகள்

இலட்சங்கள் சம்பாதிக்க

பாலைவன வாழ்க்கை!


முத்துக்கமலத்தில்:இமாம்.கவுஸ் மொய்தீன்.

29.5.2008.

இயற்கை !!

அண்டங்கள் ஆகாயங்கள்
இயற்கை!

வானும் விண்மீன்களும்
இயற்கை!

சூரியனும் ஒளியும்
இயற்கை!

அதைச் சுற்றிவரும் கிரகங்கள்
இயற்கை!

நேரமும் காலமும்
இயற்கை!

மேகமும் மின்னலும்
இயற்கை!

காற்றும் மழையும்
இயற்கை!

நீரும் நிலமும்
இயற்கை!

நிலநடுக்கமும் எரிமலைகளும்
இயற்கை!

ஆறுகள் கடல்கள் அருவிகள்
இயற்கை!

வறட்சியும் பசுமையும்
இயற்கை!

உயிரினங்கள் அனைத்தும்
இயற்கை!

அவற்றின் பிறப்பும் இறப்பும்
இயற்கை!

உயிரும் உடலும்
இயற்கை!

இரவும் பகலும்
இயற்கை!

உறக்கமும் விழிப்பும்
இயற்கை!

பசியும் தாகமும்
இயற்கை!

அன்பும் பாசமும்
இயற்கை!

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும்
இயற்கை!

அவற்றின் மாட்சியும் மகிமையும்
இயற்கை! இயற்கை !!

தமிழோவியத்தில்:கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

மே 22 2008

தடுப்பூசி மரணங்கள்!!

கண்டம் விட்டுக்

கண்டம் பாயும்

அழிவுச் சக்திமிக்க

ஏவுகணைகள்!


வானிலும்

ஒற்றர்களாய்

விண்கோள்கள்!


விண்ணில் மண்ணில்

நீரில் பயணம் செய்திட

புதுமைகள் மிக்க

வாகனங்கள்!


உலகின் நிகழ்வுகளை

உடனே அறிந்திட

தொலைக்காட்சி

வானொலிகள்!


பூவுலகின்

மூலைமுடுக்கெல்லாம்

தொடர்பு கொண்டிட

தொலைபேசி செல்பேசிகள்!


பரந்த பூபாளத்தைச்

சிறு அறைக்குள்

சுறுக்கிவிட்ட

தகவல் தொழில் நுட்பம்!


வெப்ப குளிர் பிரதேசங்களில்

வசிப்பவர் வசதிக்காக

குளிரூட்டி

வெப்பமூட்டிகள்!


பழுதடைந்த

உறுப்புகளுக்குப் பதில்

மாற்றுறுப்பு

பொருத்தங்கள்!


இன்னும் சொல்லிமாளா

எத்தனை யெத்தனையோ

சாதனைகள் புதுமைகள்

இவ்வறிவியல் யுகத்தில்!


இருப்பினும்

அடிக்கடி நிகழ்கின்றன

நோய்தடுப்பு மருந்துகளால்

மழலையரின் மரணங்கள்!


இவற்றுக் கெல்லாம்

யார் பொறுப்பு?

எப்படி தவிர்க்கப் போகிறோம்?



திண்ணை,

Thursday May 8, 2008


--------------------------------------------------------------------------------


drimamgm@hotmail.com

Wednesday, April 30, 2008

தேடலில்...! !

சாலை வசதிகளற்ற

குக்கிராமம்!

வறுமையின் மடியில்

கூடுதலாய் ஓர் குழந்தை!

தெருவிளக்கு தந்தது

கல்வி ஒளி!

உழைப்பும் உண்மையும் தந்தன

உயர்வும் ஊக்கமும்!





இன்றோ ஐம்பதைக்

கடந்த வயது!

வசதிகள் வளம்

நற்பெயர்

மதிப்பு மரியாதை

செல்வமும் செல்வாக்கும்

இவருடன் சேர

இவற்றுடன் சேர்ந்தன

கொழுப்பு கொதிப்பு

சர்க்கரையும்...!





உழைப்பைக் கொண்டு

வறுமையை வென்றவர்

நலத்தை மறந்து

வளத்தைத் தேடியதால்-இன்று

வளத்தைக் கொண்டு

நலத்தின் தேடலில்....

கிடைக்குமா...??



-திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்.

Thursday April 17, 2008

ஜடம்!!

மரத்தினால் ஆனதாலோ

உலோகத்தினால் ஆனதாலோ

கண்கூடாய்க் காண்பவற்றை

வெளி கூறாது

ஜடமாயிருந்திருந்து

ஜடமாகி விட்டதாலோ?

'ஜடம்' என்றே அழைக்கப்படுகிறது.


இதுவும் ஓர் நாடகமேடைதான்!

எத்தனை யெத்தனை காட்சிகள்

நாடகங்கள் அரங்கேற்றங்கள்

மந்திரங்கள் சத்தியங்கள்!

அனைத்தையும் கண்டு

ரசிப்பதோடு சரி!

மற்றபடி 'ஜடமே' தான்.


பெரிய மனிதர்

உத்தமர் சாதனையாளர்

மாவீரர் மதிப்புக்குரியவர்

எல்லாமே வெளித் தோற்றம் தான்!

நாற் சுவற்றுக்குள்

அவரின் மிருகத்தனம்

அப்பப்ப் பா .........!!

புலிகள் எலியாவதும்

யானைகள் பூனைகளாவதும்...

எதையும் காணாதது போல்

'ஜடமா'கவே... கட்டில் !

-இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம். -ஏப்ரல் 10 2008.

வார்ப்பு. - 22.4.2008.

பந்துக்களில்லாப் பந்துகள்!!

விலை போகும்

வரையில் மட்டுமே

பந்துகட்கு

மதிப்பு மரியாதை

அலங்காரம்

கௌரவம் எல்லாம்!


ஒன்றைப் போலின்றி

ஒவ்வொன்றுக்கும்

விளையாட்டுகளுக் கொப்பத்

தனித்தனி

ஆர விட்ட எடை அளவைகள்

தோல் ரப்பர் பிளாஸ்டிக் எனத்

தனித்தனி தன்மைகள்!


வகை வகையாய்

விளையாட்டுக்கள்

அவற்றின் ஆளுமையில்

திறமை தந்திரம் உக்தி

பலம் கொண்ட வீரர்களுக்கு

வெற்றிச் சான்றிதழ்கள்

கோப்பைகள் பரிசுகள்

பணமுடிப்புகள்

பாராட்டுக்கள்!


ஊடகப் ஒளிபரப்பும்

நேரடிப் பார்வையாளர்கட்கு

காட்சியாய் இருந்ததும்

மட்டுமே

அவை கண்ட

சுகம் சொர்க்கம்!


உபயோகத்தில் வந்து

அடி உதை பட்டு

கிழிந்து உருகுலைந்து

சின்னா பின்னமான

பந்துகட்குக் கிடைத்த

கௌரவம்

குப்பைமேடுகள்!


'என்ன மனிதரிவர்?

இருந்தவரையில்

பயன்படுத்திக் கொண்டு

குப்பையில் எறிதல் தான்

மனிதப் பண்போ?'

அலுத்துக் கொண்ட பந்துக்கு

குப்பை மேடு கூறியது


'ஆட்சி அதிகாரம்

அரசியல் செல்வாக்கு எனும்

விளையாட்டுக்களில்

உம்மைக் காட்டிலும்

மிகையாய்ச் சிதைந்தவர்

மனிதரில் தான் பற்பலர்'!

- இமாம்.கவுஸ் மொய்தீன் mailto:drimamgm2001@yahoo.co.in

கீற்று. - 1.4.2008.

தமிழோவியம். - 3.4.2008.

குறுங்கவிதைகள்!!

கூத்தும் மேளமும்

கொண்டாட்டமும் தாளமும்

பிணம் மட்டும் அமைதியாய்!

-------------------

கோடையின் கொடுமை

கசக்கவில்லை வேம்பு

இனிக்கிறது நிழல்!

-------------------

தோப்பில் பேய்!

திருடர் பயமில்லை

கனக்கிறது முதலாளிப்பை!

-------------------

பொதுவிடத்தில் கம்பம்

காலைத் தூக்கியபடி

நாயும் மனிதனும்!

-------------------

தண்ணீரில் கண்டம்

கோயில் குளத்தில்

சோதிடர் பிணம்!

-------------------

நேபாளத்திலும்

கொலை கொள்ளை

கூர்க்காக்கள் தூக்கம்!

-------------------

பிடித்தது புளியங்கொம்பு

தாங்கியது தூக்குக் கயிறு

வரதட்சணை!

-------------------

தொண்டரணிவகுப்பு

கட்சி ஊர்வலம்

பலியாடுகள்!

-------------------

பூகம்பமா?சூறாவளியா?

தொலைநோக்குச் சிந்தனை

எறும்பு விஞ்ஞானிகள்!

-------------------

முரசின் முழக்கம்

வாண வேடிக்கை

மழையழகு!

-------------------

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1.4.2008.

Thursday, March 27, 2008

நாற்பது நிலைக்க...!!

நாள்தோறும் காலையில்

ஊடகங்களைத் திறந்தாலே

பிழைப்புக்காக வங்கக் கடலில்

மீன் பிடிக்கச் சென்ற

தமிழக மீனவரைச்

சிறை பிடிப்பதும்

உயிர் பறிப்பதும்

தவறாமல் வரும் செய்திகள்!

வானம் பொய்க்கலாம்

பூமி பொய்க்கலாம்

விண்மீன்கள் பொய்க்கலாம்

விண்கோள்கள் பொய்க்கலாம்

இந்நிகழ்வுகள் மட்டும்

பொய்ப்பதே இல்லை!


மத்தியில் ஆள

முழுதாய் நாற்பதைத் தந்திட்ட

தமிழகத்தின் அரசு

மத்திய அரசுக்கு

வேண்டுகோள் விடுப்பதும்

இலங்கை அரசுக்கு

கண்டனம் தெரிவிப்பதும்

தொடர்ந்தாலும்

அவர்களின் போக்கில் மாற்றம்.....?


இந்தியத் தமிழர்கள் மீது

நிகழும் அச்சுறுத்தல்கள்

தடுக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள்

காக்கப்பட வேண்டும்!

பிரச்சினைகள் யாவும்

தீர்க்கப்பட வேண்டும்!

குறைகள் குற்றங்கள்

களையப்பட வேண்டும்!

நிறைகள் இன்னும்

மிகைப்படுத்தல் வேண்டும்!

ஆளும் அரசுகள்

உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே

இனிவரும் தேர்தலிலும்

இனியவை நாற்பது

இனிதே நிலைக்கும்!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

மார்ச் 20 2008

தண்டனையின் பிடியில்....! !

காலம் மாறிவிட்டது!

நீதிமன்றங்களிலும்

பெரும்

மாற்றம்!

நீதி -

நிதியின்பக்கம்!

நியாயம் -

விலையின் பக்கம்!

அநியாயங்களின்

கைகளில் நியாயம்!

இப்போதெல்லாம்

கட்டப் பஞ்சாயத்துக்கள்

வெளியில் நடப்பதில்லை!

கண்கள்

கட்டப்பட்ட நிலையில்

நீதி தேவதை!

வெற்றிக் களிப்பில்

சீருடை அணிந்தோர்!

சட்டம் தன் கடமையில்

தவறுவதில்லை!

தண்டனையின்

பிடியில் தான்

தர்மம்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

3-3-2008.

சொர்க்க பூமி!!

வீரத் தலைவனின்

விவேகத்தில்

நிகழ்ந்த

தவறு!

விலை போனவர்களால்

வீழ்ச்சியடைந்தது

நாடு!


இன்றோ

நே(நா)ச நாடுகளின்

ஆக்கிரமிப்பில்

கற்பு முதற்கொண்டு

எல்லாமே கொள்ளை போகிறது

அல்லது

விற்பனையாகிறது!


ஆக்கிரமிப்பாளர்கள்

'சொர்க்க பூமி ஆக்குவோம்'

என்கிற தம் வாக்குறுதியை

நிறைவேற்றி இருக்கிறார்கள்!

'ஈராக்'

அவர்களுக்குச்

சொர்க்க பூமியே!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

24-2-2008.

நாளைய நட்சத்திரங்கள்!!

அன்று....

தலையைப் படிய வாரி

எண்ணெய் முகத்தில் வடிய

சீருடை முழுதாயணிந்து

சுமக்க முடியாமல்

புத்தக மூட்டையைச் சுமந்து

கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்

சிக்கித் தவித்துப்

பேருந்தில் பயணம் செய்து

பள்ளிக்குச் சென்றபோது

பரிகாசம் பேசியோருண்டு!

பரிதாபம் கொண்டோருண்டு!

விமர்சித்தோரும் பலருண்டு!


இன்று....

படிப்பு முடிந்துவிட்டது

பட்டம் பெற்றாகிவிட்டது

பணியும் கிடைத்துவிட்டது

கை நிறையச் சம்பளம்

வளங்கள் வசதிகள்

வாகனங்கள் ஏவலாட்களென

சொந்த வாழ்வில்....

என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்

என்னைப் போன்றே

வசதிகள் வளமுடன்....


பணிக்குச் செல்லும் நேரம்

பள்ளிக்குச் செல்வோரைப்

பார்க்கிறேன்!

முதுகில் புத்தக மூட்டை....

அதில் புத்தகங்களுடன்

அவரவரின் எதிர்காலம்

பெற்றோரின் கனவுகள்

கற்பனைகள் உழைப்பு

நம்பிக்கையென அனைத்தையும்

சுமந்து செல்லும் சிறார்கள்!


இதயம் பூரிக்கிறது

நம் நாட்டின்

நாளைய மன்னர்களைக்

காண்கையில்!

இன்று நாம் ஒளிர்வதைப் போல்

நாளை ஒளிர இருக்கும்

இந்தியாவின்

நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம் - பிப்ரவரி 28 2008.


முத்துக்கமலம் - 29-2-2008.

Friday, March 14, 2008

சர்க்கரை!!

இனிப்பானது

சுவையானது

அனைவருக்கும்

பிடித்தமானது!

லட்டு பூந்தி

மைசூர் பாக்

அல்வா பழங்கள்... எனப்

பற்பல உருவங்களில்

உலா வருவது!


விருந்தோம்பலும்

மங்கல நிகழ்ச்சிகளும்

இவை யன்றி

இருப்பதில்லை!

தன் இனிப்பாலும்

சுவையாலும்

தானோர் 'கொடூரன்'

என்பதை உணராது

செய்து விடும்

தன்மை மிக்கது!


ஒருவர்

தன் வாழ்நாளில்

உட் கொண்ட

சர்க்கரைத் துகள்களைக்

காட்டிலும்

அது உட்கொண்ட

மனித உயிர்கள்

பற்பல மடங்கு!


'இன்சுலின்'

சுரப்பின் குறைபாடே

இந் நோய்க்குக் காரணம்!

உடனே உணர்ந்து

செயல்படா விட்டால்

விழிகள்

சிறுநீரகங்கள்

இதயம்

மூளை

நரம்பு மண்டலமென

ஒவ்வொன்றாய்ப் பாதிக்கும்!


உடலில் தொன்றும்

சிறுபுண் பெரிதாகும்

பீடித்த பகுதியைச்

சிறுகச் சிறுக

அரிக்கும்! அழிக்கும்!

அழிந்த பகுதி

பகுதி பகுதியாய்

தவணைகளில்

வெட்டி எடுக்கப்படும்!

இறுதியில்

உயிருக்கே உலைவைக்கும்!


சர்க்கரையுடன்

பகைமை.....!

நலம் காக்கும்.

உறவு......?

நலமும் வளமும்

நிம்மதியும் அழிக்கும்!

ஆன்மாவைச்

சாந்தி அடைய வைத்தே

அது சாந்தி அடையும்!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-02-18

நா காக்க!!

'அளவுக்கு மீறினால்

அமிர்தமும் நஞ்சு'

'அளவோடு இருந்தால்

வளமோடு வாழலாம்'

நோயற்ற வாழ்வே

குறையற்ற செல்வம்'

போன்ற பொன்மொழிகளை

நினைவு கொள்ளாததால்

இன்று

முப்பது நாற்பதுகளில்

இருப்போரெல்லாம்

மருத்துவமனைகளின்

தொடர் வாசத்தில்!


சர்க்கரை

இரத்த அழுத்தம்

உடற் பருமன்

நெஞ்சு வலி

கழுத்து வலி

முதுகு வலி

மூட்டு வலி

உடற் சோர்வு

நரம்புத் தளர்ச்சியென

நீண்டு கொண்டே போகும்

உடலியல் பிரச்சினைகள்!


காரணம் யாதென

ஆராய்ந்து பார்ப்பின்

உணவுக் கட்டுப்பாடும்

உடற் பயிற்சியின்மையுமே!

'யாகாவாராயினும்

நாகாக்க' என

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே

சொல்லி வைத்தார்

பொய்யா மொழிப் புலவர்!

நாமும் நினைவில் கொள்வோம்

அவர் 'நாகாக்க' சொன்னது

சொல்லில் மட்டுமல்ல

சுவையிலும் தான்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பு.

27-1-2008.

Saturday, February 9, 2008

எதில் திருப்தி ?

திருப்தி எதிலே

மனிதா உனக்கு?

எதிலுமே இல்லை

திருப்தி உனக்கு!


மண்வீட்டில் இருக்கையிலே

கல்வீடு ஆசை!

கல்வீடு கிடைத்ததுமே

மாடமாளிகைக்கு ஆசை!


நூறுகள் சம்பாதிக்கையில்

ஆயிரம் உன்னாசை!

ஆயிரங்கள் கண்டதுமே

இலட்சம் கோடிகள் மேலாசை!


கால்கொண்டு நடக்கையிலே

இருசக்கரம் உன்னாசை!

இருசக்கரம் கிடைத்ததுமே

நாற்சக்கரத்தின் மேலாசை!


மணவாழ்வு காணாதபோது

ஒருமனைவி ஆசை!

மனைவியொருத்தி வந்தபின்னர்

மற்றபெண்களின் மேலாசை!


கூட்டத்தில் ஒருவனாயிருந்தபோது

மேடை ஏற ஆசை!

ஏறமேடை கிடைத்ததுமே

பதவியின் மேலாசை!


குழந்தையேதும் இல்லாதபோது

ஒரு குழந்தை ஆசை!

பெண்ணாக அது பிறந்துவிட்டால்

ஆண் குழந்தை ஆசை!


திருப்திஇல்லா வாழ்க்கையினாலே

மனநிம்மதி அழியும்!

மனநிம்மதி இழந்தவாழ்வில்

மரணம் ஒன்றே மிஞ்சும்!


- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

24-1-2008.

அகவிழியால் நோக்குங்கள்!!

நேர்மையான சம்பாதனை

எங்கே நிற்கிறது?

அநியாயமாய்

சம்பாதிப்பவனிடமே

செல்வம் குவிகிறது!

வளமும் வசதிகளும்

கூடுகின்றன

எனச் சொல்வோரே!


கோளாறு

உங்கள் பார்வையில்!

புறவிழிகளை விடுத்து

அகவிழியால் நோக்குங்கள்!

சொத்துக்கள் மட்டுமே தெரியும்

உங்கள் சொத்தைப் பார்வையில்

சாபங்களும் பாவங்களும் ஏனோ?

விடுபட்டு விடுகின்றன!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-2-2008.

Sunday, January 13, 2008

பொங்கட்டும் பொங்கல்!!

பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் பொங்கல்!

தமிழர் இல்லந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் மகிழ்ச்சி!

தமிழர் உள்ளந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் தமிழுணர்வு!

தமிழர் இதயந்தோறும்.


பொங்குக பொங்கல்!

முழங்கட்டும் தமிழே!

தமிழர் நா யாவும்.


பொங்குக பொங்கல்!

தழைக்கட்டும் முயற்சி!

தமிழர் ஏற்றம் பெறவே.


பொங்குக பொங்கல்!

வேண்டுக இறைவனை!

தமிழர் ஈழம் பெறவே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் இனஉணர்வு!

செழிக்கட்டும் தமிழர் வாழ்வே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் விவேகம்!

அழிக தமிழர் பகையே!


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்,ஜனவரி 10 2008.

முத்துக்கமலம்,14-1-2008.

Friday, January 4, 2008

என்ன குறை உன்னில் தமிழா?

என்ன குறை உன்னில் தமிழா?

என்றேனும் சிந்தித்தாயா?


சாரம் இல்லாதவனா? - நீ

சோரம் போனவனா?


உறக்கத்தில் இருக்கின்றாயா?

உணர்வின்றி இருக்கின்றாயா?


கல்வியில் உழைப்பில் திறமையில்

சிறப்பாய் இருக்கின்ற நீ!


மொழியில் இனஉணர்வில் மட்டும்

மந்தமாய் இருக்கின்றாயே!


அந்நிய மொழிகளையெல்லாம்

அழகாய் உரைக்கின்றாய் நீ!


உன்மொழி தமிழை மட்டும்

கலந்தே கதைக்கின்றாய் நீ!


கங்கை கொண்டான்

கடாரம் வென்றான் என -முன்னர்

எத்தனைப் பெருமைகள் உனக்கு!


தமிழனின் வீரம் மானம்

எல்லாமே ஏட்டில் இன்று!


அண்டையில் ஈழத்தமிழன்

அடிக்கப்படுகின்றான் ஒடுக்கப்படுகின்றான்!


அகதியாய் நாட்டை விட்டே

விரட்டப் படுகின்றான்!


தமிழகம் மட்டுமின்றி

மலேசியா சிங்கப்பூரிலும்

நிறைவாய் இருக்கும் உனக்கு...


ஈழத்தின் நிகழ்வுகள் கண்டுமோர்

கண்டனக் கணை கூடவா

தொடுக்க முடியவில்லை? ஏன்?


அந்நியம் ஆட்கொண்டதாலா? - நீ

அந்நியத்தை அரவணைத்துக் கொண்டதாலா?


தாய்ப்பால் பருகாததாலா?

புட்டிப்பால் பருகியதாலா?


என்ன குறை உன்னில் தமிழா?

இப் புத்தாண்டிலாவது சிந்திப்பாயா?



எழுதியவர்: இமாம்.கவுஸ் மொய்தீன்.

தமிழமுதம்.

04 ஜனவரி 2008.

Tuesday, January 1, 2008

இப் புத்தாண்டிலாவது உணருமா?

அச்சு ஊடகம்

காட்சி ஊடகம்

எதைத் திறந்தாலும்

கொலை கொள்ளை

கடத்தல் கற்பழிப்பு

நாச வேலைகள்

அத்துமீறல்கள்

அராஜகங்கள்

ஆக்கிரமிப்புகளென

நாள்தோரும்

நெஞ்சைப் பதைக்கும்

செய்திகளாய்

அழிவுச்சக்திகளின்

ஆதிக்கம்!


" ஒரு கன்னத்தில்

அறைந்தால்

மறு கன்னத்தைத்

திருப்பிக் காட்டு"

என்றார் ஏசுபிரான்!

அவரின் போதனைகளைக்

காற்றில் விட்டதின்

விளைவே

இந்நிகழ்வுகளின்

பிரவாகம்!


அஹிம்சையைக்

கடைபிடித்ததுடன் -அதைப்

போதிக்கவும் செய்தார்

மஹாத்மா காந்தி!

இந்தியாவும் கடைபிடித்தது!

அதன் மகத்தான

சாதனையே

இந்தியாவின் விடுதலை!

உலகமே கண்டு

வியந்து போற்றும்

இப் பேருண்மையை

விடுதலைக்காக இன்னும்

போராடிக் கொண்டிருக்கும்

நாடுகள்

இப் புத்தாண்டிலாவது

உணருமா?


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

வார்ப்பு.

31.12.2007.