Saturday, November 24, 2007

வாழைத் தோல்!!

வாழைத் தோல்!!
--------------------

சாலையின் நடுவில்

வாழைத் தோல்

வீசிச் சென்றதோர்

ஆறறிவு!

வீதியில் நடந்திடும்

ஆறறிவினரில்

அதைப் பாராமல்

நடந்தனர் ஒருசாரார்!

பார்த்தும் பாராமல்

சென்றனர் மறுசாரார்!

'அம்மா'

என்ற அலறலுடன்

வழுக்கி விழுந்ததோர்

அறுபதை எட்டிய

ஆறறிவு!

விழுந்த வேகத்தில்

எலும்பின் முறிவு!

வசவைப் பொழிந்தது

வலியும் வேதனையும்!

சுற்றிலும் சூழ்ந்த

ஆறறிவினரில்

' ச்சூ ச்சூ...' என்றனர்

ஒரு சாரார்!

'பார்த்து நடக்கக் கூடாதா'?

என்றபடியே

பார்த்துச் சிரித்தனர்

ஒரு சாரார்!

முதலுதவி செய்து

சிகிச்சைக்காக

அனுப்பி வைத்தனர்

இரக்கம் கொண்ட

ஒரு சாரார்!

'ஐந்தறிவு

பழத்தைத் தின்றிருந்தால்

தோலுடனன்றோ

விழுங்கி இருக்கும்..

விபத்தையும்

அங்கே தவிர்த்திருக்கும்'

என்றெண்ணியபடியே

வாழைத்தோல்

நிகழ்வுகளை அங்கு

பரிகாசத்துடன்

பார்த்து ரசித்தது

புன்னகை பூத்தது

பூரித்துக் கிடந்தது...

ஐந்தறிவொன்று

அதை நெருங்கிய வரையில்...!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பில்

பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-11-11

No comments: