கொக்கரக்கோ எனக் கூவி
விடியலிலே விழிக்க வைத்து
விடிந்ததை உணர்த்தி விட்டு
இனிமையாய் எங்களுடன்
கொக் கொக் கொக் என
காதல் மொழி பேசி
கூடி இன்பம் கண்ட
சேவல் இனத்தினை
செயற்கை கரு எனும் சதியால்
பிரித்து விட்ட மானிடரே!
எங்களின் காதலை அழித்து விட்டு
நீங்கள் மட்டும் காதல் காதலென
காவியங்கள், காப்பியங்கள்,
வரலாறுகள், திரைப் படங்கள்,
காதலுக்காக தாஜ்மஹால்,
வசந்த மாளிகை என
காதல் சின்னங்கள் எழுப்புகின்றீர்!
எங்களின் இயற்கைக் கூடலை
கூடாமல் செய்து விட்டு
நீங்கள் மட்டும் இயற்கைக் கூடலையும்
வேண்டாத சேர்க்கையையும்
நாடுவதென்ன நியாயம்?
எய்ட்ஸ்சும் பால்வினையும்
தந்திட்டப் பாடந்தனை அறியீரோ?
வயகராவையும் லேகியத்தையும்
தேடி ஓடும் இந்நாளில்
வயகரா வேண்டாத எங்களுக்கு
வாய்த்திட்ட வாய்ப்பை ஏன் மறுக்கின்றீர்?
இயற்கையாய் ஈன்றிடவே
என்றென்றும் விரும்பிடும் நீர்
இனதைப் பெருக்க எங்களுக்கு
இன்குபேட்டர் ஏன் தந்தீர்?
இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்
எனும் குடும்பக் கட்டுப்பாடு உங்களுக்கு,
இருக்கும் வரையில் முட்டையிட்டு
ஓடாய்த் தேயும் நிலை எங்களுக்கு!
யாமிடும் முட்டைகளை
முழுமையாய் விழுங்கிவிட்டு
கோழிகளாகிய எங்களையும்
குர்மாவாய் செய்து உண்டு
கொழுத்துப் பெருத்திடும் மானிடரே!
எங்களினத்தை அழிக்காதீர்!
உங்களின் கொலஸ்ட்ராலையும்
அதிகரிக்காதீர்!
நாங்கள் இயற்கையாய்
வாழ்ந்திடவே விரும்புகின்றோம்.
திருந்திடுவீர் மானிடரே! மீண்டும்
திருப்பிடுவீர் எங்கள் காதல் வாழ்வை !
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.
தமிழோவியம்.
பிப்ரவரி 08 2007
Sunday, November 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment