Sunday, August 31, 2008

எதுவும் சாத்தியமே!


பறப்பன நடப்பன
ஊர்வன தவழ்வன என
அனைத்து உயிரினங்கட்கும்
சொந்தமாய் இல்லங்களாம்
மரங்கள் கூடுகள் புதர்கள்
புற்றுகள் குகைகள்...!

மனிதர்கட்கும் அவரவர்
வளம் வசதிகட்கேற்ப
சொந்த வீடுகள்
வாடகை வீடுகள்
குடிசைகள் சாலையோரங்கள்
இல்லங்களாய்...!

வாழ்நாளில்
சொந்தமாய் ஓர் வீடு
பெரும்பாலோரின் கனவு!
ஒரே நாளில்
ஊரையே அழித்துத்
தரைமட்டமாக்குதல்
சிலரின் நனவு!

உலகே வியக்கும்
வேடிக்கை பார்க்கும்
மனசாட்சியையும்
மனிதநேயத்தையும்
புதைத்துவிட்டவர்களின்
அரசியலை......

- இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி:அதிகாலை.

23-08-2008 17:21

சுதந்திரமே உன்னால்...!


சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி யென
வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

சொத்துப் பங்கீடு!!


தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!

அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!

மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!

அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!

மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!

சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!

கடைசி மகனாய்
நான்....

என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

நன்றி:முத்துக்கமலம்.

1-8-2008.

Wednesday, July 30, 2008

'சைக்கோ' !!


நாள்தோறும் விடிந்தும்

விடியாமலேயே இருக்கின்றது

காலைப் பொழுது!


ஊடகங்களைத் திறக்க

பதைபதைக்கிறது

மனம்!


'சைக்கோ'வின் அடுத்த பலி

உறக்கத்திலிருக்கும்

அப்பாவி எவருமா?


'சைக்கோ' என நினைத்ததால்

கொல்லப்பட்டிருக்கும்

அப்பாவி எவருமா?


'சைக்கோ'வின் பெயரால்

கைதாகி இருக்கும்

அப்பாவி எவருமா?


கைதானவரும் கொல்லப்பட்டவரும்

'சைக்கோ'வாய் இருக்கும் பட்சத்தில்

தொடரும் கொடூரக் கொலைகளுக்குக்

காரணம் யார்? யார்? யார்?


பொதுமக்களுக்கு வேண்டுமாயின்

புதிராய் பீதியாய் இருக்கலாம்

'சைக்கோ'!


ஸ்காட்லாண்ட் யார்டுக்கு

இணையானதாகக் கருதப்படும்

தமிழகக் காவல்துறைக்குமா...?


தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூலை 31 2008

கோடிகள் கொடுத்தாலும்...!!


அம்மா......!

ஊரில் இருக்கின்றார்!

கேட்போர்க்கெல்லாம்

பதிலாய் இருந்த

நிகழ் காலம்...

அவரின் மரணத்தால்

இறந்த காலமானது!



அவருக்குச் செய்த

பணிவிடைகள்

கடுகாய்ச் சுறுங்கிவிட

தவறியவை

மலை போல்

மனக்கண் முன்...!



தன் உதிரத்தை

உணவாய்

உணர்வாய்

ஊட்டியது...



தாலாட்டு பாடி

தொட்டிலாட்டி

உறங்க வைத்தது...



நிலாவை

நட்சத்திரங்களை

மின்மினிகளைக் காட்டி

சோறூட்டியது...



உடல் நலமில்லாத

நேரங்களில்

உண்ணாமல் உறங்காமல்

சேவை செய்தது...



விரல் பிடித்து

நடை எழுத்து

சித்திரம்

பழக்கியது...



மழலையைக் கேட்டுப்

பூரித்தது

புன்முறுவல் பூத்தது

பெருமை கொண்டது...



குழந்தைகட்கு

வலியேதுமென்றால்

துடித்தது துவண்டது

துயரம் கொண்டது...



ஒவ் வொன்றும்

தொடர் காட்சியாய்

நெஞ்சை

வருட...



உடன்

வைத்திருந்துப்

பணிவிடை செய்துப்

பார்த்திருந் திருக்கலாமே...!



விம்மியது இதயம்

அருவிகளாயின விழிகள்

கசக்கிப் பிழிந்தது

குற்ற மனப்பான்மை!



விலகி இருந்ததாலும்

பிரிந்து விட்டதாலும்

இழந்த சுகம்

கோடிகள் கொடுத்தாலும்

திரும்புமோ?



தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூலை 17 2008.

முத்துக்கமலத்தில் - 15.7.2008.

காந்தி பிறந்த நாடு !!


மீண்டும் மீண்டும்

தொடந்து கொண்டுதானிருக்கின்றன

நச்சுச் சாராய சாவுகள்!


மீண்டும் மீண்டும்

தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது

விதவை அநாதைகளின் பெருக்கம்!



மீண்டும் மீண்டும்

தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது

உறவு நட்புகளின் ஒப்பாரி!



நின்று கொல்லும் நஞ்சு- மது!

நிறுத்தாமல் குடித்தாதால்

இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!



கொலைகள் கொள்ளைகள்

விலையேற்றம் பணவீக்கமென

அனைத்தும் வளர்பிறையாய்....!



அனைத்துத் துறைகளிலுமே

வேகமாய் முன்னேறி வருகிறது

நம் நாடு!



சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்

முழுகவனத்துடன்....

காவல்துறை!



சூடான பரபரப்பான

செய்திகளின் தேடலில்....

ஊடகங்கள்!



கேள்வி கண்டனக் கணைகளை

வீசுவதில்... சலிப்படையாத

எதிர்க்கட்சிகள்!



ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்

கோலொச்சிக் கொண்டிருக்கிறது

நம் அரசு!



காந்தி பிறந்த நாட்டில்

நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

பெருமையுடன்....


தமிழோவியத்தில்- இமாம் கவுஸ் மொய்தீன்.

ஜூன் 26 2008

சாதனை!!


படிப்பில் பந்தயத்தில்

வீரத்தில் விவேகத்தில்

திறமையில் உயர்வில்

விஞ்சியிருப்பதும் முந்தியிருப்பதும்

சாதனை!


படைத்திட்ட சாதனைகளை

விஞ்சுவதும் மிஞ்சுவதும்

தனித்தன்மையுடன்

ஒளிர்வதும்

சாதனை!


உண்மை உழைப்பு

கடமை கண்ணியம்

கட்டுப்பாடு புத்திசாலித்தனத்தால்

சாதிப்பதே

சாதனை!


மனித உயிரின்

வாழ்வுக்கும் உயர்வுக்கும்

ஆக்கத்துக்கும் இன்றியமையாதவற்றை

கண்டுபிடித்தல்

சாதனை!


விண்கோள்கள் ஏவுகணைகள்

விண்வெளி ஆராய்ச்சி

கணினிகள் தகவல்தொழில்நுட்பம்

மாற்றுறுப்புப் பொருத்தங்கள் எல்லாமே

சாதனைகள்!


உயிர்காக்கும் மருந்துகள்

நோயறியும் பொறிகள்

வானொலி தொலைக்காட்சி

தொலைப்பேசி செல்பேசிகள் எல்லாமே

சாதனைகள்!


விண்ணில் மண்ணில்

நீரில் பயணம் செய்ய

விதவிதமான அதிவெக

வாகனங்கள் எல்லாமே

சாதனைகள்!


விவசாயத்தில் பசுமைப்புரட்சி

உற்பத்தியில் தன்னிறைவு

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்

விமானங்களில் பறந்து கொண்டிருக்கும்

நம் பட்டதாரிகள் எல்லாமே

சாதனைகள்!


மகாத்மா முதற்கொண்டு

சாதனையாளர்களையும் சாதனைகளையும்

பட்டியலிட்டால் எண்ணிமாளாதவையாய்

எத்தனை யெத்தனையோ

சாதனைகள்!


புகை போதை விபச்சாரம்

சமூகவிரோதம் ஏழ்மையில்லா

சமுதாயம் காணும் இனியநாளே

இந்தியாவின் மகத்தான உன்னதமான

சாதனையாகும்!!

நன்றி:தமிழோவியம்.

ஜூன் 19 2008