Saturday, February 9, 2008

எதில் திருப்தி ?

திருப்தி எதிலே

மனிதா உனக்கு?

எதிலுமே இல்லை

திருப்தி உனக்கு!


மண்வீட்டில் இருக்கையிலே

கல்வீடு ஆசை!

கல்வீடு கிடைத்ததுமே

மாடமாளிகைக்கு ஆசை!


நூறுகள் சம்பாதிக்கையில்

ஆயிரம் உன்னாசை!

ஆயிரங்கள் கண்டதுமே

இலட்சம் கோடிகள் மேலாசை!


கால்கொண்டு நடக்கையிலே

இருசக்கரம் உன்னாசை!

இருசக்கரம் கிடைத்ததுமே

நாற்சக்கரத்தின் மேலாசை!


மணவாழ்வு காணாதபோது

ஒருமனைவி ஆசை!

மனைவியொருத்தி வந்தபின்னர்

மற்றபெண்களின் மேலாசை!


கூட்டத்தில் ஒருவனாயிருந்தபோது

மேடை ஏற ஆசை!

ஏறமேடை கிடைத்ததுமே

பதவியின் மேலாசை!


குழந்தையேதும் இல்லாதபோது

ஒரு குழந்தை ஆசை!

பெண்ணாக அது பிறந்துவிட்டால்

ஆண் குழந்தை ஆசை!


திருப்திஇல்லா வாழ்க்கையினாலே

மனநிம்மதி அழியும்!

மனநிம்மதி இழந்தவாழ்வில்

மரணம் ஒன்றே மிஞ்சும்!


- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

24-1-2008.

அகவிழியால் நோக்குங்கள்!!

நேர்மையான சம்பாதனை

எங்கே நிற்கிறது?

அநியாயமாய்

சம்பாதிப்பவனிடமே

செல்வம் குவிகிறது!

வளமும் வசதிகளும்

கூடுகின்றன

எனச் சொல்வோரே!


கோளாறு

உங்கள் பார்வையில்!

புறவிழிகளை விடுத்து

அகவிழியால் நோக்குங்கள்!

சொத்துக்கள் மட்டுமே தெரியும்

உங்கள் சொத்தைப் பார்வையில்

சாபங்களும் பாவங்களும் ஏனோ?

விடுபட்டு விடுகின்றன!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-2-2008.

Sunday, January 13, 2008

பொங்கட்டும் பொங்கல்!!

பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் பொங்கல்!

தமிழர் இல்லந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் மகிழ்ச்சி!

தமிழர் உள்ளந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் தமிழுணர்வு!

தமிழர் இதயந்தோறும்.


பொங்குக பொங்கல்!

முழங்கட்டும் தமிழே!

தமிழர் நா யாவும்.


பொங்குக பொங்கல்!

தழைக்கட்டும் முயற்சி!

தமிழர் ஏற்றம் பெறவே.


பொங்குக பொங்கல்!

வேண்டுக இறைவனை!

தமிழர் ஈழம் பெறவே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் இனஉணர்வு!

செழிக்கட்டும் தமிழர் வாழ்வே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் விவேகம்!

அழிக தமிழர் பகையே!


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்,ஜனவரி 10 2008.

முத்துக்கமலம்,14-1-2008.

Friday, January 4, 2008

என்ன குறை உன்னில் தமிழா?

என்ன குறை உன்னில் தமிழா?

என்றேனும் சிந்தித்தாயா?


சாரம் இல்லாதவனா? - நீ

சோரம் போனவனா?


உறக்கத்தில் இருக்கின்றாயா?

உணர்வின்றி இருக்கின்றாயா?


கல்வியில் உழைப்பில் திறமையில்

சிறப்பாய் இருக்கின்ற நீ!


மொழியில் இனஉணர்வில் மட்டும்

மந்தமாய் இருக்கின்றாயே!


அந்நிய மொழிகளையெல்லாம்

அழகாய் உரைக்கின்றாய் நீ!


உன்மொழி தமிழை மட்டும்

கலந்தே கதைக்கின்றாய் நீ!


கங்கை கொண்டான்

கடாரம் வென்றான் என -முன்னர்

எத்தனைப் பெருமைகள் உனக்கு!


தமிழனின் வீரம் மானம்

எல்லாமே ஏட்டில் இன்று!


அண்டையில் ஈழத்தமிழன்

அடிக்கப்படுகின்றான் ஒடுக்கப்படுகின்றான்!


அகதியாய் நாட்டை விட்டே

விரட்டப் படுகின்றான்!


தமிழகம் மட்டுமின்றி

மலேசியா சிங்கப்பூரிலும்

நிறைவாய் இருக்கும் உனக்கு...


ஈழத்தின் நிகழ்வுகள் கண்டுமோர்

கண்டனக் கணை கூடவா

தொடுக்க முடியவில்லை? ஏன்?


அந்நியம் ஆட்கொண்டதாலா? - நீ

அந்நியத்தை அரவணைத்துக் கொண்டதாலா?


தாய்ப்பால் பருகாததாலா?

புட்டிப்பால் பருகியதாலா?


என்ன குறை உன்னில் தமிழா?

இப் புத்தாண்டிலாவது சிந்திப்பாயா?



எழுதியவர்: இமாம்.கவுஸ் மொய்தீன்.

தமிழமுதம்.

04 ஜனவரி 2008.

Tuesday, January 1, 2008

இப் புத்தாண்டிலாவது உணருமா?

அச்சு ஊடகம்

காட்சி ஊடகம்

எதைத் திறந்தாலும்

கொலை கொள்ளை

கடத்தல் கற்பழிப்பு

நாச வேலைகள்

அத்துமீறல்கள்

அராஜகங்கள்

ஆக்கிரமிப்புகளென

நாள்தோரும்

நெஞ்சைப் பதைக்கும்

செய்திகளாய்

அழிவுச்சக்திகளின்

ஆதிக்கம்!


" ஒரு கன்னத்தில்

அறைந்தால்

மறு கன்னத்தைத்

திருப்பிக் காட்டு"

என்றார் ஏசுபிரான்!

அவரின் போதனைகளைக்

காற்றில் விட்டதின்

விளைவே

இந்நிகழ்வுகளின்

பிரவாகம்!


அஹிம்சையைக்

கடைபிடித்ததுடன் -அதைப்

போதிக்கவும் செய்தார்

மஹாத்மா காந்தி!

இந்தியாவும் கடைபிடித்தது!

அதன் மகத்தான

சாதனையே

இந்தியாவின் விடுதலை!

உலகமே கண்டு

வியந்து போற்றும்

இப் பேருண்மையை

விடுதலைக்காக இன்னும்

போராடிக் கொண்டிருக்கும்

நாடுகள்

இப் புத்தாண்டிலாவது

உணருமா?


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

வார்ப்பு.

31.12.2007.

Saturday, December 29, 2007

அழிவில்லாதது!!

'நீ எனக்குத் தாயுமில்லை

நான் உனக்கு மகனுமில்லை'!


'நீ எனக்கு மகனுமில்லை

நான் உனக்கு அப்பனுமில்லை'!


'நீ என் உடன் பிறப்புமில்லை

நான் உன் கூடப் பிறக்கவுமில்லை'!


'நீ யாரோ

நான் யாரோ'!


இப்படியாக

கோபத்தின் வேகத்தில்

வெறுப்பின் விளிம்பில்

விரக்தியின் உச்சத்தில்

எத்தனையெத்தனையோ

வார்த்தைகளின் வெளிப்பாடு

அறியாமை இருளில்

உணர்ச்சிகளின் தாக்கத்தில்

நம் அன்றாட வாழ்வில்!


வாயின் வார்த்தைகள்

நிஜமாகுமா?

வாளால் வெட்டுவதால்

நீர் துண்டாகி விடுமா?

ஒட்டும் உறவுகளும்

நட்பும் வேண்டுமானால்

கூடலாம் பிரியலாம்!

அழியலாம்!


இறைவனால் உருவாக்கப்பட்ட

இரத்த உறவுகளுக்குள்

உயிர்ப் பிரிவுகள்

உடலழிவுகள் உண்டு!

ஆனால்

உறவுப் பிரிவுகளோ

அழிவுகளோ

என்றென்றும் இல்லை!

இறப்பே இல்லா

உறவுகள் இவை!!


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

டிசம்பர் 27 2007.

Friday, December 21, 2007

தியாகத் திருநாள்!!

எண்ணற்ற

தியாகங்கள்

இவ்வையத்தில்

வரலாற்றிலும்

வாழ்விலும்!


நாட்டுக்காக

மொழிக்காக

உறவுக்காக

நட்புக்காக

காதலுக்காகவென!


உயிர்

உறவுகள்

உடமைகள்

சொத்துக்கள்

சுகங்களெனப்

பலவற்றின் தியாகம்!


ஆயினும்

ஆயிரமாயிரம்

ஆண்டுகளாய்ப்

போற்றப்பட்டு வரும்

ஒரே தியாகம்

இப்ராஹீம்(அலை)நபி

அவர்களுடையது தான்!


தள்ளாத முதுமையில்

தனக்குப் பிறந்த

ஒரே மகனை

இறைவனின் ஆணையேற்றுப்

பலிப்பீடம் ஏற்றியது!


சுய நலமே சூழ்ந்திருக்கும்

இவ்வுலகில் நாம்

தியாக உணர்வு

பெற்றிட

உணர்த்தும் நாளே

தியாகத் திருநாள்

பக்ரீத்!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

15-12-2007.